ஊட்டியில் நாளை தொடங்க இருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை : ஊட்டியில் நாளை (சனிக்கிழமை) தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெற இருந்த ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றான ஊட்டியில் சுற்றுலாப்பயணிகளை கவர பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அங்கு இயற்கையுடன் சேர்ந்து பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் சுற்றுலாவாசிகளை கவரும் விதமாக ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா என்ற திட்டத்தை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அறிவித்து இருந்தது. இதன்படி ஊட்டி வரும் சுற்றுலாவாசிகள் மேற்கு தொடர்ச்சி மலைக்கு மேல் ஹெலிகாப்டரில் பறந்து இயற்கை அழகை ரசிக்கலாம். இந்த திட்டம் நாளை (சனிக்கிழமை) முதல் தொடங்கி வருகிற 30-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இந்த திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகவேல் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், மலைக்கு மேல் ஹெலிகாப்டர் பறப்பது அபாயகரமானது. அதுமட்டுமல்ல அங்குளள் வன விலங்குகளுக்கு ஹெலிகாப்டரின் சத்தம் மனஉளைச்லை தரும். இந்த திட்டம் விலங்குகளை கடுமையாக பாதிக்கும். இந்த திட்டம் குறித்து அரசுக்கு தவறாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதனால், இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, 'ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து இதுவரை அரசு இறுதி முடிவு எடுக்கவில்லை. அதுமட்டுமல்ல வனத்துறையும் இந்த சுற்றுலா திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கவில்லை'' என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் குறித்து வருகிற 17-ந்தேதி வரை எந்த முடிவையும் அரசு எடுக்கக்கூடாது. செயல்படுத்தவும் கூடாது என்று தடை விதித்து, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.












Click it and Unblock the Notifications