ஒருவழியாக ரிலீஸுக்கு ரெடியாகும் ‘துருவ நட்சத்திரம்’.. தேதி குறித்த சென்னை உயர் நீதிமன்றம்!
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் வெளியிட அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தேதிக்குள் படத்தை வெளியிட இயலவில்லை என்றால் கால நீட்டிப்புக் கோரி நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவான 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான் கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டிலேயே வெளியாக வேண்டிய இந்தப் படம் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்களால் தாமதம் ஆனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன நிலையில், தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, படத்தின் ரிலீஸை உறுதி செய்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தை ஜூன் 15 க்கு முன் வெளியிடலாம். இப்பட நிதி விவகாரங்களை கையாள தனியாக புதிய வங்கி கணக்கு திறக்கவும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23 ஆம், தேதிக்கு தள்ளி வைத்தார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் ரிலீசுக்கு தடை கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தற்போது சுமுகமான தீர்வை எட்டியுள்ளது. தயாரிப்பு தரப்பு மற்றும் கடன் வழங்கிய தரப்பினரிடையே ஏற்பட்ட உடன்படிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், படத்தை திரையரங்குகளில் வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளது. இதன் மூலம் நீண்டகாலமாக சட்ட சிக்கல்களில் சிக்கியிருந்த இப்படம், எந்தத் தடையுமின்றி ரசிகர்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
துருவ நட்சத்திரம் படக்குழுவினர் விரைவில் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், வரும் வாரங்களிலேயே படம் திரைக்கு வரும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது விக்ரம் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது.













Click it and Unblock the Notifications