சந்தை அல்ல என கண்டித்த சென்னை ஐகோர்ட்.. மன்னிப்பு கேட்ட ரங்கராஜ நரசிம்மன்.. இன்று என்ன நடந்தது?
சென்னை: தமிழக முதலமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தன் மீது பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன் சத்தம் போட்டு வாதிட்டதாக கூறப்படுகிறது . இதனால் கோபம் அடைந்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இது சந்தை அல்ல, நீதிமன்றம் என கண்டித்தார். இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
திருச்சி மாநகரம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர், 'நமது கோவில்கள்' என்ற பெயரில் 'யூடியூப்' சேனல் வைத்துள்ளார். இவர் தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக சென்னை சைபர் க்ரைம் போலீஸார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பெண் வழக்கறிஞர் குறி்த்து தரக்குறைவாக விமர்சித்ததாக மற்றொரு வழக்கில் திருவல்லிக்கேணி போலீஸாரும் அவரை கைது செய்தனர்.

அப்போது தனது தந்தையை சட்டவிரோதமாக போலீஸார் பொய் வழக்குகளில் கைது செய்துள்ளதாக கூறி ரங்கராஜன் நரசிம்மனின் மகன் முகுந்தன் ரங்கராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தனது தந்தையின் கைது நடவடிக்கைகளை சட்டவிரோதம் என அறிவித்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அப்போது வாதங்களுக்கு பிறகு நீதிபதி, சிறையில் உள்ள ரங்கராஜன் நரசிம்மன் அரசியல் தலைவர்கள் பற்றியோ அல்லது மடாதிபதிகள் பற்றியோ எதுவும் பேசக்கூடாது. சாட்சிகளை மிரட்டக்கூடாது. அவர்களை தொடர்புகொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து போடப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் நிபந்தனை ஜாமீன் பெற்றதால் ரங்கராஜன் நரசிம்மன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்..
இந்த நிலையில் வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பழிவாங்கும் நோக்கோடு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சத்தம் போட்டு வாதிட்டார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி இது சந்தை அல்ல, நீதிமன்றம் என கண்டித்தார். இதையடுத்து ரங்கராஜ நரசிம்மன் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி,புகாரை மேற்கொண்டு விசாரிக்க முகாந்திரம் உள்ளது என்றும் விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் கூறினார்.












Click it and Unblock the Notifications