அமைச்சர் ராஜகண்ணப்பன் கோரிக்கை நிராகரிப்பு.. தேர்தல் வழக்கிற்கு தடை விதிக்க மறுத்தது சென்னை ஐகோர்ட்!
சென்னை: அமைச்சர் ராஜ கண்ணப்பணுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்கவும் மறுத்தது ஐகோர்ட்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன், கடந்த 2021 மார்ச் 27 ஆம் தேதி, தொகுதியில் உள்ள கருங்குளம், கோழிபத்தி கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது தேர்தல் விதிகளை மீறி, திமுக கொடி கம்பங்களை நட்டு, தோரணங்கள் கட்டி பிரச்சாரம் செய்ததாக பேரையூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதேபோல, சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளர் தமிழரசியை ஆதரித்து, 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி ராஜகண்ணப்பன் பிரச்சாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிகளை மீறி, 15 வாகனங்களில் பிரச்சாரம் செய்ய வந்ததாகவும், பட்டாசு வெடித்ததாகவும் சாலைக்கிராமம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த இரு தேர்தல் விதிமீறல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு மனுக்களும் நீதிபதி பி.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில், வழக்கில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும், வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டார். மேலும், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 17 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications