ஈஷாவின் புதிய எரிவாயு மயானம்.. கோர்ட்டுக்கு போன சுப்பிரமணியன்! நீதிமன்றம் போட்ட முக்கிய உத்தரவு
சென்னை: ஈஷா அறக்கட்டளை சார்பில், இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தில் மின் தகன மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, ஈஷா மையத்தில் ஈஷா அறக்கட்டளை - காலபைரவர் தகன மண்டபம் என்ற பெயரில் மின் தகன மேடை அமைக்கும் பணிகளை ஈஷா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கு இக்கரை பொலுவம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவரின் பரிந்துரை அடிப்படையில், தொண்டாமுத்தூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், மின் தகன மேடை கட்டுமானத்தை அகற்றக் கோரியும், இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என்.சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையத்தின் கீழ் அமைந்துள்ள இக்கரை பொலுவம்பட்டி கிராமம், யானைகள் வாழ்விடமாக உள்ளது.
மின்தகன மேடை அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் தகன மேடை அமைக்கும் பகுதிக்கு அருகில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. சட்டப்படி, குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகள் அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 90 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் மயானங்கள் அமைக்கப்படவேண்டும். இதை மீறும் வகையில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைக்கப்படுகிறது எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மின் தகன மேடை அமைக்கப்பட்டால் அதன் அருகில் வசிக்கும் மக்களுக்கு பெருத்த பாதிப்பு ஏற்படும் எனவும், அப்பகுதியில் இருந்து தங்களை துரத்தும் நோக்கிலேயே இந்த மின்தகன மேடை அமைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நொய்யல் நதிக்கரையோரம் செம்மேடு இக்கரை பொலுவம்பட்டி கிராமத்தில் ஏற்கனவே ஒரு மயானம் அமைந்திருக்கிறது. தகன மேடைகளை அமைக்க ஈஷாவுக்கு அனுமதிப்பது அபாயகரமானது என்பதால், ஈஷா அறக்கட்டளை - காலபைரவர் தகன மண்டபம் அமைக்க அனுமதியளித்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.
அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத் மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஈஷா அறக்கட்டளை தரப்பில், 2019 ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தகனமேடை கட்டுமானப் பணிகள் முடிந்து விட்ட போதிலும், அனுமதி பெற்றால் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும் எனவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறாமல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட மாட்டாது எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு ஜூன் 12ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஈஷா அறக்கட்டளைக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
முன்னதாக ஈஷாவில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு மயானத்திற்கு எதிராக பொய் செய்திகளை பரப்பி, அப்பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வெளியூர் நபர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷாவை சுற்றியுள்ள 6 கிராம மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, பட்டியார் கோவில்பதி, முட்டத்துயல், செம்மேடு ஆகிய 6 கிராம மக்கள் சார்பாக நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications