ஜாபர் சாதிக் ஜாமீன் வழக்கு.. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு
சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 26 ஆம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனாபானு, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்ட 12 தனி நபர்களும், ஜாபர் சாதிக்கின் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட 8 நிறுவனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது தாக்கல் செய்த மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுக்கள் குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications