ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை வேண்டும்.. பரபர மனு.. தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
"தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை"
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈவிகேஸ். இளங்வோவன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதி நெருங்குவதால் அங்கு இறுதிக்கட்ட பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ள நிலையிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்கிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.
ஒவ்வொரு தேர்தலின் போதும், பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்படுகின்றன. எனினும், தவறிழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. எனவே தேர்தல் முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஏஎஸ் அதிகாரிகள், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு அமைக்க வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இதுசம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications