அமைச்சர் ராஜகண்ணப்பன் ஹேப்பி.. ஒரே நாளில் இரண்டு வழக்குகள் காலி.. ஹைகோர்ட் அதிரடி
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான இரண்டு தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ராஜகண்ணப்பன் விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, பெருநாழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதேபோல, தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக கமுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி ராஜகண்ணப்பன் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்தும் ராஜ கண்ணப்பன் கடந்த 2015ம் ஆண்டு சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 1991 முதல் 96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரத்து 252 மதிப்புள்ள கட்டிடங்கள், நிலங்கள், வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை தன் பெயரிலும் தன் மனைவி, தாயார் மற்றும் உறவினர் பெயரிலும் வாங்கியதாக 1996ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தார்கள்.
இந்த வழக்கில் ராஜகண்ணப்பனின் மனைவி நளாயினி, தாயார் ராஜலட்சுமி, தம்பி செந்தாமரை, மற்றொரு தம்பி திருவழகு, உறவினர்கள் செல்லம்மாள், கண்ணகி, கலைராஜன், கண்ணாத்தாள், தவமணி, ஜெயபாரதி, தேவகியம்மாள், பாலசுப்பிரமணியன், கணபதி, சுலோச்சனா, கலைமதி, லட்சுமணன், மாணிக்கம், பெருமாள், சரஸ்வதி ஆகிய 20 பேர் சேர்க்கப்பட்டார்கள். இந்த வழக்கு 19 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், போலீசார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று கடந்த 2015ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
இதனிடையே வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், தமிழக உயர் கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவர் தனது பதவியை கடந்த டிசம்பரில் ராஜினாமா செய்தார். இதனிடையே பொன்முடி வகித்து வந்த துறைகளை அமைச்சர் ராஜகண்ணப்பன் தற்போது கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications