ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு பாரபட்சமின்றி அனுமதி.. காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
சென்னை: ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது பாரபட்சம் இன்றி முடிவெடுக்க வேண்டும் என காவல் துறைக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக பா.ம.க. வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஐந்து நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கவில்லை என அனுமதி மறுத்த காவல் துறையினர், ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த ஒரே நாளில் அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் பாமக கொள்கை பரப்புச் செயலாளர் சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் பதிலளித்த காவல் துறை, திமுக ஆர்ப்பாட்டத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும், அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், காவல்துறையினர் எந்த பாரபட்சமும் இல்லாமல் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்றும், விண்ணப்பங்களின் மீது முடிவெடுக்கும் முன் சம்பந்தப்பட்ட தரப்பினர் விளக்கம் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி பாமக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications