முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு.. சென்னை ஹைகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராயபுரம் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாகக் குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த ஒருவரைத் தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவைச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையையும் காயங்கள் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென முறையீடு செய்தனர். ஆனால் நாளைய வழக்குகளுக்கான பட்டியல் ஏற்கனவே தயாராகி விட்டதால் ஜெயக்குமாரின் மனுவை வரும் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications