மார்ச் 4ல் உச்ச நீதிமன்றம்.. மார்ச் 13ல் உயர்நீதிமன்றம்.. செந்தில் பாலாஜி வழக்கில் நடப்பது என்ன?
சென்னை: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2011 முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளின் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் போலீஸார் பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில் பாலாஜி. அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவர் மீது 3 குற்ற வழக்குகளைப் பதிவு செய்தார்கள். இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது

இந்நிலையில், இந்த 3 வழக்குகளிலும் போலீஸார் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2,222 பேர் மீது குற்றம்சாட்டி கூடுதல் குற்றப்பத்திரிகைகளை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கப்படும் என எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்.பி - எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தரப்பில், "அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் தனித்தனியாக குற்றப்பத்திரிகைகளை காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இவற்றை ஒன்றாக சேர்த்து விசாரித்தால் விசாரணை முடிவதற்கே பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே அமைச்சர செந்தில் பாலாஜிக்கு எதிரான 3 வழக்குகளையும் தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்," ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது.
ஆனால் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், மனு தொடர்பாக போலீசார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 13-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மார்ச் 13ம் தேதி தான் அடுத்து கட்ட நிலவரம் தெரியவரும்..
இது ஒருபுறம் எனில் செந்தில் பாலாஜி அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றதில் கடந்த இரண்டு வாரம் முன்பு அதிருப்தியை வெளிப்படுத்திய உச்ச நீதிமன்றம், அமைச்சராக தொடர்வேன் என செந்தில் பாலாஜி சொன்னால், வழக்கின் விசாரணையை விரைவுப்படுத்துவோம் என கூறியது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுகள், அது குறித்து அமலாக்கத்துறை தெரிவித்து இருக்க கூடிய தகவல்கள் எல்லாம் மிகவும் தீவிரமானது என்று கூறிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இதில் இன்னும் வழக்கு விசாரணை கூட முடியவில்லை என்றும் ஆனால் அவ்வளவு அவசரமாக செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பேற்றது ஏன்?" என்றும் அப்போது கேள்வி எழுப்பினார்கள்.
வழக்கில் தொடர்புடைய நபர் அமைச்சராக வந்தால், சாட்சியங்கள் அச்சப்பட மாட்டார்களா? பிறகு எப்படி வழக்கு விசாரணை நியாயமாக நடக்கும் என அடுக்கடுக்காக நீதிபதிகள் அப்போது கேள்வி எழுப்பினார்கள். செந்தில் பாலாஜி தரப்பு, அவர் அமைச்சராக தொடர்வாரா இல்லையா என்பதை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றம் வழக்கின் விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.அந்த வகையில் உச்ச நீதிமன்றம் அடுத்தகட்டமாக என்ன உத்தரவு பிறப்பிக்கும் என்பது வரும் செவ்வாய்க்கிழமை தெரியவரும்.












Click it and Unblock the Notifications