கைதான காஞ்சிபுரம் டிஎஸ்பி..மேல்முறையீட்டுக்குச் சென்ற காவல்துறை! அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்
சென்னை: வன்கொடுமை வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை என காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக, உயர் நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிபதி மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதால், மாவட்ட நீதிபதி மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில், விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை அறிக்கையை, நிர்வாகக் குழுவுக்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகேஷ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். சிவகுமாருக்கும் பூசிவாக்கம் பகுதியில் வசித்து வரும் முருகன் என்பவருக்கும் இடையே கடந்த மாதம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த அடிதடி சம்பவம் குறித்து முருகன், வாலாஜாபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார் மாவட்ட நீதிபதி செம்மல்.

வன்கொடுமை வழக்கு
வழக்கு விசாரணையின் போது புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்ய உத்தரவிட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, காஞ்சிபுரம் எஸ்பி, டிஎஸ்பி சங்கர் கணேஷ் மற்றும் வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர், காவலர்கள் லோகேஷ்வரன், ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
காஞ்சிபுரம் நீதிபதி நடவடிக்கை
மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி, காவல் துறை தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி, உயர்நீதிமன்ற விஜிலன்ஸ் பதிவாளருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
டிஎஸ்பி சங்கர் கணேஷ்
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் மீண்டும் விசாரணை வந்தபோது, விசாரணை அறிக்கையை விஜிலென்ஸ் பதிவாளர் தாக்கல் செய்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முகிலன், மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரிலேயே சம்பந்தப்பட்ட பேக்கரியை உணவுப் பொருள் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்ததாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து விஜிலென்ஸ் பதிவாளர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையைப் பார்வையிட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் தனது உத்தரவினைப் பிறப்பித்தார்.
நீதித்துறை நடவடிக்கை
அந்த உத்தரவில்," மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எதிராக போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் உறுதியாகின்றன. எனவே விஜிலென்ஸ் பதிவாளர் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கொண்ட விஜிலன்ஸ் குழுவின் நடவடிக்கைக்காகப் பதிவுத்துறை அனுப்ப வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி அதே இடத்தில் பணிபுரிவது உகந்ததாக இருக்காது. பல்வேறு வழக்கு விசாரணைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கையைப் பணியிட மாற்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications