சென்னை ஐகோர்ட் வளாகத்தில் 2009ல் நடந்த காவல்துறை - வழக்கறிஞர்கள் மோதல்.. ரத்து செய்து தீர்ப்பு!
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு போலீசார் - வழக்கறிஞர்கள் இடையே நடந்த பெரும் மோதல் சம்பவம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மீது வழக்கறிஞர்கள் சிலர் தாக்குதல் நடத்த முயற்சித்தனர். இதுதொடர்பான வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்களை கைது செய்த போது, காவல் துறையினருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக வெடித்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உள்ளிட்ட 28 வழக்கறிஞர்களும், 4 காவல்துறை அதிகாரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜி. மோகன கிருஷ்ணன், தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்தார். அப்போது, இந்த மோதல் சம்பவத்தின்போது நடந்த அனைத்து நிகழ்வுகளையும் தானும் ஒரு வழக்கறிஞராக இருந்து நேரில் பார்த்ததாக நீதிபதி நிர்மல்குமார் குறிப்பிட்டார்.
மேலும், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார் நீதிபதி நிர்மல்குமார். 7 மாதங்களுக்கு முன்னர் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனுதாரர்கள் அனைவரின் மீதான வழக்கையும் ரத்து செய்து நீதிபதி நிர்மல்குமார் இன்று தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications