எப்படியாவது மெஸ்ஸி அணி வெல்ல வேண்டும் என உழைத்த நடுவர்கள்? உலகக்கோப்பையில் சீட்டிங் சர்ச்சை
சென்னை: நேற்று நடந்த அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் அர்ஜென்டினா அசத்தலாக வென்றது. முதல் பாதியில் பின்னடைவை சந்தித்து இருந்த அர்ஜென்டினா கடைசி கட்டத்தில் அசத்தலாக ஆட்டத்தை மாற்றி வென்றது. ஆனால் இந்த வெற்றிக்கு பின் அர்ஜென்டினா அணி வீரர்களை விட நடுவர்களே அதிகம் உழைத்தாக புகார்கள் எழுந்துள்ளது.
2026 ஃபிஃபா உலகக்கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நேற்று நடைபெற்ற அர்ஜென்டினா - எகிப்து அணிகளுக்கு இடையேயான போட்டி, கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகப் பேசப்பட்டிருக்க வேண்டியது.

ஆனால், ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் த்ரில் வெற்றி பெற்றிருந்தாலும், அர்ஜென்டினா இதில் ஏமாற்றி வென்றதாக புகார்கள் அடுக்கப்படுகின்றன. ஏமாற்றி, சதி செய்தி அர்ஜென்டினா வென்றுவிட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.
நடந்தது என்ன?
போட்டியின் முடிவுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹோசம் ஹாசன் மற்றும் முன்னணி வீரர்கள் இந்த ஆட்டத்தில் சதி நடந்துள்ளதாக புகார் வைத்துள்ளனர். நேற்று ஆட்டம் முழுக்க மெஸ்ஸி அணி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. நடுவர்களின் செயல்பாடுகள் அர்ஜென்டினாவுக்குச் சாதகமாக இருந்ததாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலகக்கோப்பையில் இருந்து மெஸ்ஸி வெளியேறக் கூடாதா?
செய்தியாளர் சந்திப்பில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, ஆவேசமாகப் பேசிய பயிற்சியாளர் ஹோசம் ஹாசன் கடுமையான புகார்களை வைத்தார். அதில்.. நாங்கள் திறமை இல்லாமல், அதிர்ஷ்டம் இல்லாமல் தோற்கவில்லை. இன்று நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எங்களை ஏமாற்றிவிட்டார்.
எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாங்கள் உங்கள் முன் சொல்ல விரும்புகிறோம். நான் மூடி மறைத்து பேச விரும்பவில்லை. உலக சாம்பியன்களான அர்ஜென்டினா தொடர்ந்து தொடரில் நீடிக்க வேண்டும், லியோனல் மெஸ்ஸி உலகக்கோப்பையை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காகவே வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர்.
வணிக ரீதியிலான ஆதரவு அவர்களுக்கு உள்ளது. மெஸ்ஸி இல்லை என்றால் இந்த தொடரை மக்கள் பார்க்க மாட்டார்கள் என்பதால் அவர்களை வெல்ல வைக்க தேவையான விஷயங்களை செய்துள்ளனர். இந்த அநீதியைக் கண்டிக்கும் விதமாக, இந்த உலகக்கோப்பையின் மீதம் உள்ள போட்டிகளைத் நான் பார்க்கப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அப்படி என்னதான் சீட்டிங் நடந்தது?
நேற்று எகிப்து அணி 1-0 என முன்னிலையில் இருந்தபோது, அந்த அணியின் முஸ்தபா ஜிகோ ஒரு அபாரமான கோல் அடித்தார். ஆனால், அந்த கோலுக்கு முன்பு சில நொடிகளுக்கு முன் எகிப்து வீரர் ஃபவுல் செய்ததாக கூறி அந்த கோல் ரத்து செய்யப்பட்டது. விஏஆர் சோதனையின் மூலம் அந்த கோல் ரத்து செய்யப்பட்டது. பொதுவாக இந்த சோதனை கோல் அடிக்கும் சமயத்தில் ஏதாவது முறைகேடு நடந்தால் செய்வார்கள். ஆனால் கோலுக்கு முன்பு நீண்ட நேரத்திற்கு நடந்த ஒரு விஷயத்தை காரணம் அதை ஃபவுல் என்று கூறி இந்த கோலை ரத்து செய்துள்ளனர்.
விஏஆர் இன்னும் பின்னோக்கிச் சென்று ஆய்வு செய்திருந்தால் எகிப்தின் பிரமிட் காலத்துக்கே சென்றிருக்கும் என்று விளையாட்டு விமர்சகர்களே இதைக் கிண்டல் செய்யும் அளவுக்கு இந்த முடிவு சர்ச்சையானது.
அதேபோல் எகிப்தின் முகமது சாலா மற்றும் ஒமர் மர்மூஷ் ஆகியோர் அர்ஜென்டினாவின் டிஃபென்ஸ் பாக்ஸிற்குள் தள்ளி விடப்பட்டனர், தாக்கப்பட்டனர். எகிப்து வீரர் ஹம்டி ஃபாத்தியின் ஜெர்சி அர்ஜென்டினா வீரர் மெக் அலிஸ்டரால் பின்னால் இழுக்கப்பட்டபோதும் நடுவர் பெனால்டி வழங்கவில்லை. இதற்கெல்லாம் விஆர்ஆர் பயன்படுத்தப்படவில்லை.
எகிப்தின் கோல் ரத்து செய்யப்பட்டபோது துரிதமாக பயன்படுத்தப்பட்ட விஏஆர் தொழில்நுட்பம், அர்ஜென்டினா பாக்ஸிற்குள் எகிப்து வீரர்களின் ஜெர்சி இழுக்கப்பட்டபோது ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று எகிப்து தரப்பு கேள்வி எழுப்புகிறது.
இந்தத் தவறு நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அர்ஜென்டினா தனது 3வது வின்னிங் கோலை அடித்தது ரசிகர்களை மேலும் ஆத்திரமூட்டியுள்ளது.
போட்டிக்கு பின் கண்ணீருடன் பேட்டியளித்த எகிப்து அணியின் வீரர் முஸ்தபா ஜிகோ.. நடுவர் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு எதிராகவே செயல்பட்டார். ஒரு ஒட்டுமொத்த நாட்டின் உழைப்பையும் அவர் வீணடித்துவிட்டார். இந்தத் தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. அர்ஜென்டினாவுக்கு என் வாழ்த்துகள்.. அவர்களை வெல்ல வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு ஆடி உள்ளனர் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனங்களை வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications