ஆட்சி கவிழப்போகுது.. பதறிப்போன வைகோ.. விஜய்க்கு ஆதரவாக சட்டென வந்தது ஏன்? பரபர பின்னணி
சென்னை: மதிமுக நிறுவனர் வைகோ திமுக மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. திமுகவிற்கு எதிராக நேற்று காட்டமாக அறிக்கை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கைக்கு பின் முக்கியமான பல விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, விஜய்யின் தவெக அரசுக்கு வைகோ ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் அடுத்தகட்டப் பரபரப்புக்கு நகர்ந்திருக்கிறது. தற்போது தவெக ஆட்சி இன்னும் ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும் என்று திமுக தரப்பு தீவிரமாகக் பிரச்சாரம் செய்து வருகிறது. திரைக்குப் பின்னால் இதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து வரிசையாக மூத்த தலைவர்கள் பலர் தவெக தாவுவது அதிகரித்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், மரகதம் குமாரவேல், எஸ். ஜெயகுமார், பி. சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகிய 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்துவிட்டு, முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அனைவரும் அறிந்ததே. இது போக விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி சேர்த்து மொத்தம் 7 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
7 தொகுதிகளில் இடைத்தேர்தல்
விரைவில் வரவிருக்கும் 7 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தவெகவை வீழ்த்தி, ஆட்சியை நிலைகுலையச் செய்ய திமுக கணக்கு போடுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது 6 மாதத்தில் கண்டிப்பாக தவெக ஆட்சி கவிழும் என்று திமுக தீர்க்கமாக நம்புகிறதாம்.
இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தவெகவுக்குச் சறுக்கலாக அமைந்தால், வைகோ எடுத்த கூட்டணி தாவும் முடிவு மிகப்பெரிய தோல்வியாக முடிந்துவிடும். கமிஷன், கரப்ஷன் இல்லாத ஆட்சி என்று தவெகவைப் பாராட்டிய வைகோ, ஒருவேளை ஆட்சிக்கு ஆபத்து வந்தால் மீண்டும் அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகும்.
முக்கியமாக மற்ற கூட்டணி கட்சிகள் தவெக பக்கம் சென்றாலும்.. திமுகவை வைகோ அளவிற்கு அடிக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்; திமுகவின் இந்தத் தீவிரக் காய் நகர்த்தல்களால் வைகோ தற்போது கடும் கோபத்திலும் அதிர்ச்சியிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. தவெக ஆட்சியைக் காப்பதும், இடைத்தேர்தலில் தங்களின் செல்வாக்கை நிரூபிப்பதும் தான் வைகோ மற்றும் விஜய்யின் அடுத்தகட்ட சவாலாக இருக்கும்.
திமுகவின் இந்த தீவிர காய் நகர்த்தல்கள், திட்டங்களையோ உணர்ந்த பின்பே நேற்று வைகோ மிக காட்டமாக அறிக்கை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
வைகோ அறிக்கை
நேற்று வைகோ வெளியிட்ட அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, திராவிட முன்னேற்றக் கழகம் கடும் வயிற்றெரிச்சலில் இருந்து வருகிறது. இந்த ஆட்சி ஆறு மாதங்களில் கவிழ்ந்துவிடும், மூன்று மாதங்களில் முடிந்துவிடும் என்று திமுகவினர் பேசி வருகின்றனர். நான் ஆணித்தரமாகச் சொல்கிறேன், விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் உறுதியாகத் தொடரும். இந்த அரசை வீழ்த்துவதற்கு திமுகவினர் செய்யும் எந்தவொரு பகீரத முயற்சியும், அவர்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களும் ஒருக்காலும் பலிக்காது.
விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் தலைவிரித்தாடிய கமிஷன் கலாச்சாரத்திற்கும், லஞ்சம் மற்றும் ஊழலுக்கும் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் எந்தவொரு அனுமதி வாங்குவதற்கும் 10 லட்சம், 15 லட்சம், ஒரு கோடி, இரண்டு கோடி என கப்பம் கட்ட வேண்டிய அவல நிலை இருந்தது. ஆனால் இன்று, 10 காசு கூட லஞ்சம் இல்லாமல் மக்கள் நேர்மையாக அனுமதிகளைப் பெறுகிறார்கள். ஊழலை வேரோடு பிடுங்கி எறியும் நேர்மையான அரசாக விஜய் அரசு திகழ்வதால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்த அரசை முழு மனதோடு ஆதரிக்கிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் , மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையே மிகச் சிறப்பான மற்றும் வலுவான தோழமை உணர்வு மலர்ந்துள்ளது. த.வெ.க எங்களை மிகவும் மதிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் 1,400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். அப்போது, 'திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்' என்று அறிவித்தபோது, தொண்டர்கள் மண்டபமே இடிந்து விழும் அளவிற்கு கரவொலி எழுப்பி, ஆரவாரம் செய்து தங்கள் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்கள். த.வெ.க-வோடு கைகோர்ப்பதுதான் ம.தி.மு.க தொண்டர்களின் உண்மையான உணர்வும், முழுமையான மனநிலையாகும்.
ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்கி வரும் விஜய் தலைமையிலான அரசுக்கு ம.தி.மு.க தொடர்ந்து தனது அரணாக நின்று முழு ஆதரவை வழங்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications