நெல்லை எஸ்.பி சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த பிறப்பித்த உத்தரவு.. தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: நெல்லை எஸ்.பி சரவணனை கைது செய்து ஆஜர்படுத்துமாறு தென் மண்டல ஐஜிக்கு தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம் சிவந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பரமானந்தம்.
இவர், தனக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து வேலி அமைத்துள்ளதாகவும், தன்னை அந்த நிலத்துக்குள் செல்ல விடாமல் தடுப்பதாகவும் மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் செய்து இருந்தார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாகவும் போலி ஆவணம் மூலம் பெயர் மாற்றம் நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தனது புகாரில் பரமானந்தம் கூறியிருந்தார். இந்த புகாரை விசாரித்த மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனுதாரரின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று நெல்லை மாவட்ட எஸ்.பிக்கு கடந்த 10.6.2022 அன்று உத்தரவிட்டது.

நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு
இந்த சம்மனை பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால், அறிக்கை தாக்கல் செய்ய ஆணையம் கால அவகாசம் வழங்கியது.
எனினும், போலீஸ் சூப்பிரண்டு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, 30.11.2022 அன்று போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அவருக்க்கு பதிலாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் ஆஜரானார்.

ரூ. 500 அபராதம்
ஆனால் இதை ஏற்க மறுத்த தாழ்த்தப்பட்டோர் ஆணையம், "திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளரின் இத்தகைய செயல் ஆணையத்தின் உத்தரவுகள் தன்னை கட்டுப்படுத்தாது என்ற அவரது கருத்தினை வெளிப்படுத்துவதாகவும்.. ஆணையத்தில் நேரில் ஆஜராவதை தம்முடைய தகுதிக்கு குறைவானது என்று அவர் கருதுவதாகவும் அமைகிறது. எனவே தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய சட்டம் 2021 பிரிவு 9- இன் படி திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளர் சரவணனுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி சரவணன் மனு
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை கைது செய்து இந்த ஆணையத்தின் முன் விசாரணைக்கு 28.12.2022 அன்று ஆஜர்படுத்துமாறு, பிணையில் விடக்கூடிய பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கைது உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நெல்லை எஸ்.பி சரவணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

கைது நடவடிக்கைக்கு தடை
அப்போது விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.பிக்கு பதிலாக கூடுதல் எஸ்.பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கியிருப்பதால் கூடுதல் எஸ்.பி விசாரணைக்கு ஆஜரனாதாகவும் முதலில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு அதன் பிறகுதான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படதாகவும் நெல்லை எஸ்.பி தரப்பில் வாதிடப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.பிக்கு எதிரான கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications