"கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்தாலும்.. அதை அகற்ற உத்தரவிடுவோம்!" சென்னை ஐகோர்ட் பரபர கருத்து
சென்னை: பொது இடத்தை ஆக்கிமித்து கட்டப்பட்ட கோயில் தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு பலபட்டரை மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் சார்பில் பொது சாலையை ஆக்கிரமித்து கட்டுமானம் மேற்கொண்டுள்ளதாகவும், அந்த கட்டுமானம் தங்கள் சொத்துக்குச் செல்லும் வழியைத் தடுக்கும் வகையில் உள்ளதாகவும் கூறி பாப்பாயி என்பவர் நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

ஆக்கிரமிப்பு
அந்த வழக்கை விசாரணை செய்த நாமக்கல் முதன்மை மாவட்ட முன்சீப் நீதிமன்றம், கோவிலுக்கு எதிராக உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவில் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கைச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்தார்.

சென்னை உயர்நீதிமன்றம்
இந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று தனது தீர்பு வழங்கினார். குறிப்பிட்ட பொது பாதையில் கோவில் நிர்வாகம் கட்டியுள்ள அனைத்து கட்டுமானங்களையும் இரு மாதங்களில் அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார். அதேபோல பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்தும் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு
பொது சாலையை யார் ஆக்கிரமித்தாலும், கோவிலாக இருந்தாலும், அதைத் தடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, கோயில் என்ற பெயரில் பொது இடத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற எண்ணம் சிலரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடவுளே பொது இடத்தை ஆக்கிரமித்திருந்தாலும், அதை அகற்றும்படி நீதிமன்றம் உத்தரவிடும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு
மேலும், கடவுள் பெயரால் பொது இடத்தை ஆக்கிரமித்து கோவில் கட்டி, நீதிமன்றத்தின் கண்களை மறைக்க முடியாது என்றும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். ஏற்கனவே போதுமான எண்ணிக்கையில் கோவில்கள் உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, பொது இடத்தை ஆக்கிரமித்து புதிய கோவில்களைக் கட்டும்படி எந்த கடவுளும் கேட்பதில்லை என்றும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications