சசிகலா மேல்முறையீட்டு வழக்கு.. அக். 26இல் சென்னை ஐகோர்டில் இறுதி விசாரணை! பரபர தகவல்
சென்னை: சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கு தொடர்பான இறுதி விசாரணையை அக். 26ஆம் தேதிக்குச் சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்தது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டது. அப்போது முதலில் பல நிர்வாகிகளும் சசிகலாவைச் சந்தித்து தலைமை ஏற்கும்படி வலியுறுத்தினர்.
இதையடுத்து அவர் அதிமுக பொதுச்செயலாளராகத் தேர்வான நிலையில், அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை செல்ல நேர்ந்தது.
சசிகலா சிறையில் இருந்த போது, இரு அணிகளாக இயங்கி வந்த ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் ஒன்று சேர்ந்தன. கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி உருவாக்கப்பட்ட நிலையில், சசிகலா பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தான் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இருப்பினும், அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணையை அக். 26ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உள்ளது.