சுதந்திர போராட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லை.. சிலர் தவறாகவும் பயன்படுத்துகின்றனர்.. ஐகோர்ட் வேதனை
சென்னை: 1947ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்தும் அதற்குச் செய்யப்பட்ட தியாகங்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என வேதனை தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், சிலர் சுதந்திரத்தின் பலன்களைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்து ஈடுபட்ட கண்ணையா என்பவரது மனைவி மாரியம்மாள், மத்திய அரசின் தியாகிகளுக்கான உதவித்தொகைக்காக விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், கண்ணையா தனது வாரிசு குறித்த தகவலைத் தெரிவிக்கவில்லை என்பதால் மரியம்மாளின் தியாகிகளுக்கான உதவித் தொகையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மாரியம்மாள் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, "இதுபோன்ற காரணங்களைக் கூறி சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித் தொகை விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது" என்று கூறி மாரியம்மாளின் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்தார்.
மேலும், மரியம்மாளின் விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், தியாகிகளுக்கான உதவித்தொகையை மரியம்மாளுக்கு மத்திய அரசு வழங்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
1947ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்த பலருக்கும் சுதந்திரப் போராட்டங்கள் குறித்தும் அதற்குச் செய்யப்பட்ட தியாகங்கள் குறித்தும் போதிய விழிப்புணர்வு இல்லை என நீதிபதி வைத்தியநாதன் வேதனை தெரிவித்தார். அவர்கள் சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலனை அனுபவித்து வருபவர்களில், ஒரு சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் கருத்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications