அதிமுக மாஜி எம்.எல்.ஏ மீதான கடத்தல் வழக்கு.. 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க சென்னை ஐகோர்ட் கெடு!
சென்னை: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
பட்டாசு ஆலை பார்ட்னர்ஷிப் விவகாரத்தில் சிவகாசியைச் சேர்ந்த தொழிலதிபர் ரவிச்சந்திரனை கடத்தி அடித்து பணம் கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், ராஜவர்மனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் என்ற துரைப்பாண்டியன். கடந்த 2018 ஆம் ஆண்டு, ராஜவர்மன் உள்பட சிலர் கூட்டாக சேர்ந்து பங்குதாரர்கள் அடிப்படையில் பட்டாசு தொழிற்சாலை நடத்துவதாக முடிவு செய்து அதற்கான ஆவணங்களை பதிவு செய்தனர்.
பின்னர் ஒரு வார காலத்திற்குள் ராஜவர்மன் உட்பட தொழிலில் பங்குதாரர்களாக இணைந்த மேலும் சிலர், தங்களால் பட்டாசு தொழிலில் கவனம் செலுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பங்குதாரர் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, எங்களுக்கான தொகையை திருப்பிக் கொடுக்குமாறு ஆலையை நடத்தி வந்த சிவகாசியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரிடம் கேட்டுள்ளனர்.
ரவிச்சந்திரனும், ராஜவர்மன் உள்பட மூவருக்கு தலா ரூ. 70 லட்சம் என்ற அடிப்படையில் 2 கோடியே 10 லட்சம் ரூபாயை பங்குதாரர் ஒப்பந்தம் ரத்து செய்ததன் பேரில் செட்டில்மெண்ட் தொகையாக திரும்ப கொடுத்துள்ளார். பிறகு ரவிச்சந்திரன் மட்டும் பட்டாசு ஆலையை நடத்தி வந்த நிலையில், தொழிலில் நல்ல லாபம் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் பங்குதாரர்களாக இருந்து வெளியேறிய நபர்கள் சிலர் இணைந்து போலியான ஆவணங்களை தயார் செய்து, தங்களுக்கும் லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளனர். அதற்கு, ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரை கடத்திச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் லாட்ஜில் வைத்து அடித்து மிரட்டியுள்ளனர்.
தன்னை கடத்திச் சென்று அடித்து மிரட்டியவர்கள், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் என அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ரவிச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ராஜவர்மன் மற்றும் குற்றச்சம்பவத்துக்கு உடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர், முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் உள்பட 6 பேர் மீது ஆள் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், போலியான ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரவிச்சந்திரன், இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது விரைவான நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் மீதான ஆள் கடத்தல் மற்றும் மிரட்டல் வழக்கின் விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு கெடு விதித்துள்ளது.












Click it and Unblock the Notifications