7.. பொதுநல வழக்கு போட்டவருக்கு.. நேர்மையை நிரூபியுங்க.. சென்னை ஐகோர்ட் விசித்திரமான உத்தரவு
சென்னை: கோயில்கள் தொடர்பான 7 பொதுநல வழக்குகள் தொடர்ந்த ரங்கராஜன் நரசிம்மனின் நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை டெபாசிட் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் பொதுநல வழக்குகள் யார் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். மாநில அளவிலானது என்றால் பொதுநல வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே தாக்கல் செய்வார்கள்.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் உயர்நீதிமன்றம் இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள பகுதி மக்கள் மதுரையிலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ளவர்கள் சென்னையிலும் வழக்குகளை தாக்கல் செய்வார்கள்.

சென்னை மற்றும் மதுரை இரண்டில் எங்கு வேண்டுமானாலும் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய முடியும். பொதுநல வழக்குகள் விசாரணைக்கு உகந்தது என்றால் நீதிபதிகள் விசாரிப்பார்கள். இல்லாவிட்டால் தள்ளுபடி செய்வார்கள்.
சில வழக்குகள் வீணான அவசியமற்றதாக இருந்தாலோ, அல்லது நீதிமன்றத்தில் நேரத்தை வீணடிக்கும் வகையில் இருந்தாலோ அல்லது விளம்பர நோக்கில் இருந்தாலோ, வழக்கை தாக்கல் செய்தவர்களுக்கு கடுமையான அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும்.
அண்மையில் அரிகொம்பன் யானையை கேரளாவிற்கு இடமாற்றம் செய்யக்கோரிய வழக்கை அபராதத்துடன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கூட பொதுநல வழக்குகள் பல அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கோயில் தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடர்ந்து வரும் திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது 7 பொதுநல வழக்குகளை தாக்கல் செய்துள்ளார். தக்கார் நியமனம், தக்கார்களின் முன்னிலையில் உண்டியல் திறக்க கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.
இந்த 7 வழக்குகளும் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி அதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் எந்த கோயிலின் பக்தர் என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த மனுதரார் ரங்கராஜன் நரசிம்மன், நான் எல்லா கோவிகளிலும் பக்தர் தான் என பதில் அளித்தார். அப்போது நீதிபதிகள், மனுதாரர் தனது நேர்மை தன்மையை நிரூபிக்கும் வகையில் வழக்கு ஒன்றுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் என 7 வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
வழக்குகளின் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே அந்த தொகை திரும்ப அளிக்கபடும் எனவும், இல்லை என்றால் அந்த தொகை அபராதமாக எடுத்துக்கொள்ளப்படுன் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து நீதிபதிகள் 3 லட்சத்து 50 ஆயிரம் தொகையை செலுத்திய பிறகு வழக்கை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications