தொடர் கதையாகும் யானை ரயில் விபத்துகள்.. நிரந்தரமாக தடுக்க முக்கிய உத்தரவிட்ட ஐகோர்ட் மதுரை கிளை
சென்னை: ரயிலில் அடிபட்டு யானைகள் பலியாவதைத் தடுக்க, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் அதி நவீன தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் அமைப்பது குறித்து ஆய்வு செய்யலாம் என ரயில்வேவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் யானைகள் வேட்டையாடப்படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்கக் கோரி கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், திருச்சியைச் சேர்ந்த நித்திய சவுமியா ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் யானை இறப்பு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.ராம்குமார், நவீன தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தியதன் மூலம் 69 சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
யானைகள் கடக்கும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 19 கி.மீ. தூரத்திற்கு வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், யானைகள் கடந்து செல்ல ஏதுவாக தண்டவாளங்களுக்கு அடியில் பாதை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
விசாரணையின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், யானைகள் மட்டுமல்லாமல் எந்த விலங்குகளும் ரயிலில் அடிபட்டுப் பலியாவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும் எனவும், ரயில் தண்டவாளங்களை ஒட்டி சூரிய மின்சக்தி வேலிகளை அமைக்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.
Recommended Video
அதேபோல, யானைகள் கடக்கும் பகுதிகளிலும், ரயில் இன்ஜின்களிலும் தெர்மல் ஸ்கேனிங் முறையில் எச்சரிக்கும் அதி நவீன கேமராக்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்யலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதைத் தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து வனத்துறையுடன் கலந்தாலோசித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, ஜனவரி 7ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.












Click it and Unblock the Notifications