எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடி.. சசிகலாவின் அப்பீலை வரும் 30ம் தேதி விசாரிக்கிறது சென்னை நீதிமன்றம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பதவி பறித்ததாக சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனு வருகிற 30 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா சிறைக்கு சென்ற பிறகு 2017 ஆம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது. இந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடிபழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையே, தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் செய்ய சசிகலாவுக்கு அடிப்படை முகாந்திரம் இல்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரித்தது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சசிகலாவின் மேல் முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம், ஆர்.கலைமதி அமர்வில் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வரும் 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.
ஏற்கனவே, கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை ஓ பன்னீர் செல்வம் தரப்பு எதிர்பார்த்து உள்ள நிலையில், சசிகலா மனுவை வரும் 30 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க உள்ளது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications