ஸ்தம்பித்த சென்னை பல்கலைக்கழகம்.. வங்கி கணக்கு முடக்கத்தால் சிக்கல்! உயர்கல்வித்துறை சொல்வது இதுதான்
சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கிக் கணக்குகள் வருமான வரித்துறையால் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக உயர்கல்வித்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சென்னை பல்கலைக்கழகம், வருமான வரியை சரியாக செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகம் 2017 முதல் 2020-2021ஆம் நிதியாண்டு வரை ரூ.424 கோடி வருமான வரித்துறைக்கு செலுத்தவேண்டிய தொகை செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்துள்ளது.

வருமான வரி செலுத்துமாறு வருமான வரித்துறை சார்பில் சென்னை பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வரி செலுத்த அவகாசமும் வழங்கப்பட்ட நிலையில், வரி செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வருமான வரித்துறை சார்பில் 3 முறை சென்னை பல்கலைக்கழகத்திற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டதாகவும், அதற்கு உரிய வகையில் சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கத்தை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து சென்னை பல்கலைக்கழகம் நிர்வகிக்கும் வங்கி கணக்குகளை முடக்க வருமான வரித்துறை, பாரத ஸ்டேட் வங்கிக்கு கடிதம் எழுதியது. இதையடுத்து சென்னை பல்கலைக்கழகத்தைச் சார்ந்த 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் பரிந்துரையின்படி பாரத ஸ்டேட் வங்கி முடக்கியுள்ளது. வங்கி கணக்குகள் முடக்கம் காரணமாக சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வங்கி கணக்குகள் மூலமாகத்தான் பல்கலைக்கழகத்தின் நிதி சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு இந்த வங்கிக் கணக்குகள் மூலமே ஊதியம் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் மின் கட்டணம், வாகன பராமரிப்பு மற்றும் பெட்ரோல் போன்ற அன்றாட செலவினங்களுக்கும் இந்த வங்கிக் கணக்குகள் மூலமாகவே பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திடீரென வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். வங்கி கணக்கு முடக்கத்தால், எந்தவொரு நிதி சார்ந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலைக்கு நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக உயர்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. வருமான வரி செலுத்த கால நீட்டிப்பு கோரி வருமான வரித்துறையிடம் தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட நடவடிக்கையை பொறுத்தவரை மாணவர்களின் நலன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களின் நலன் நிச்சயமாக காக்கப்படும், யாரும் கவலை அடைய வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்திற்கு தற்போது துணைவேந்தர் இல்லாத நிலையில் ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடு காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையிலான குழு நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications