அதாங்க ஐயா இது.. வாழைப்பழ காமெடி பண்றீங்களா? இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை வெளுத்த நீதிபதிகள்!
சென்னை: திருவட்டாறு கோவில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை அவற்றின் பழைய இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட கோரிய வழக்கில், ஆதிகேசவர் பெருமாள் கோவில் செயல் அலுவலருக்கு 50,000 அபராதம் விதித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி தற்போது இருக்கக்கூடிய நகைகளின் மதிப்பீடு குறித்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

திருவட்டாறு பகுதியைச் சேர்ந்த தங்கப்பன் உயர்நீதிமன்ற மதுரைக் அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருவட்டாறு ஆதிகேசவர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்கக் கோரி ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அந்த வகையில் கோவிலின் கலசத்தை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் கோவில் கும்பாபிஷேகத்தின் போது பழைய கலசமும், தங்க ஆபரணங்களும் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை. கோவிலில் தங்க ஆபரணங்கள், பழைய கலசம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தேன். 1992 ஆம் ஆண்டு இந்த கோவிலில் திருட்டு சம்பவம் நடைபெற்று கோவிலுக்கு சொந்தமான தங்க அங்கி உள்ளிட்ட சில பொருட்கள் காணாமல் போயின. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவிலுக்கு சொந்தமான பல தங்க ஆபரணங்கள், சிலைகள் எங்கே உள்ளன என தெரியவில்லை .
இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் முறையாக பதில் அளிக்கப்படவில்லை. ஆகவே திருவட்டாறு அருள்மிகு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் தங்க சிவலிங்கம், பஞ்சலோக சிலைகள், பழைய கலசம் மற்றும் தங்க நகைகளை அவற்றின் பழைய இடத்தில் மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் சுப்ரமணியன் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
கோவிலின் செயல் அலுவலர் ரத்தினவேல் நேரில் ஆஜராகினார். கோவில் நிர்வாகம் தரப்பில் புகைப்படத்துடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள், "கோவிலின் நகைகள் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கடந்த வருடம் உத்தரவிட்ட நிலையில் ஏன் தாமதம் ஆனது? ஏன் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கோவில் செயல் அலுவலர் ரத்தினவேல் பாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையருக்கு உத்தரவிட்டு, செயல் அலுவலருக்கு 50,000 அபராதத்தை விதித்தும், அதனை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும்,இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளின் நடவடிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை.
ஆகவே நீதிமன்றத்தில் அளித்த நகைகளின் பட்டியலின் படி, கோவிலின் நகைகள் சரியாக உள்ளதா? என்பதை சரிபார்க்கவும், கோவிலில் காணாமல் போனதாகக் கூறப்படும் தங்க சிவலிங்கம் தொடர்பாக விசாரணை நடத்தவும் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை, விசாரணை ஆணையராக நியமிப்பதாக உத்தரவிட்டனர். மேலும், அறநிலையத்துறை அதிகாரிகள் சமர்ப்பித்திருக்கும் புகைப்படம் சிவலிங்கம் அல்ல அது மகாதேவரின் சிலை. இரண்டிற்குமான எடை வித்தியாசம் 2 கிலோவாக உள்ளது என குறிப்பிட்டனர்.
அதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில், "அந்த சிலை தான் சிவலிங்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "இது கரகாட்டக்காரன் வாழைப்பழக் கதை போல உள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிப்பதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினர். மேலும், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரணை ஆணையராக நியமித்து, கோவிலின் பாதுகாப்பு அறையில் இருக்கும் நகைகளை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலோடு ஒப்பிட்டு சரிபார்க்கவும், பத்மநாபபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இருக்கும் நகைகள் குறித்தும் விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
இந்த சமய அறநிலையத்துறை சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் நகைகள் தொடர்பான பட்டியல் சமர்ப்பிக்கப்படாத நிலையில், கோவிலின் செயல் அலுவலர் நேரில் ஆஜராக உத்தரவிட்ட பின்னர் நகை பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் நகைகளை சரி பார்ப்பதற்காக சமீபத்தில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது விசாரணையை நீர்த்துப்போக செய்யும் வகையில் இருப்பதாகவே தோன்றுகிறது. இந்து சமய அறநிலையத் துறையின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்பதை பதிவு செய்கிறோம் என குறிப்பிட்டு வழக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications