தேசிய அற நூலக திருக்குறள்! மத்திய அரசுக்கு உத்தரவு போடுங்க என வழக்கு.. தள்ளுபடி செய்த நீதிபதிகள்
சென்னை: திருக்குறள் உயர்ந்த அற நெறிகளை கொண்டிருப்பதாகவும், எனவே இதனை தேசிய அற நூலாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை பல்வேறு காரணங்கள் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தூத்துக்குடியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 226 -வது பிரிவின் கீழ் தொடுத்திருந்தார். அதில், "எல்லா காலத்திற்கும் பொருந்தக்கூடிய அறங்களைக் கூறும் திருக்குறளை திருவள்ளுவர் இயற்றினார். கல்வி, ஒழுக்கம், அரசியல், இல்லறம், நீதி உள்பட பலவற்றைப் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே திருக்குறளை தேசிய அற நூலக அறிவிக்க வேண்டும். இந்த நூலை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளின் கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கீழ்நிலை முதல் உயர்கல்வி வரை இதை பாடத்திட்டமாக கற்பிக்க வேண்டும். தமிழில் உள்ள அனைத்து சங்க கால இலக்கியங்களையும் நாட்டுடைமையாக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அதனை 'இந்தியாவின் தேசிய சொத்தாக' அறிவிக்கவும் வேண்டும்.
மேலும், சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் சமூக செயல்பாடுகள் மற்றும் சேவைக்கான விருதுகளை 'பாரத ரத்னா' போன்று 'திருவள்ளுவர்' பெயரில் வழங்க உரிய விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகே திருவள்ளுவரின் திருவுருவச் சிலையை நிறுவ வேண்டும். இந்த தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விளக்கும் திருவள்ளூரின் திருவுருவப் படமும் நெறிமுறை மிக்கதாக அறிவிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் ஆன்மிக குருவாக திருவள்ளுவரை அறிவித்து, அவரது பிறந்த நாளை இந்தியாவின் ஆன்மீக நாளாகவும் கொண்டாடப்பட வேண்டும். இதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க மத்திய, மாநில அரசுக்கு ஆணையிட வேண்டும்" என்று கோரப்பட்டிருந்தது.
வழக்கு நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "இந்தியா பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. இதில் திருக்குறளை தேசிய அறநூலாக எப்படி அறிவிக்க முடியும்?. இதுபோன்ற கோரிக்கைகளுடன் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ளவர்களும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் சிக்கல் ஏற்படும். இது எங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல. அரசின் கொள்கை முடிவு" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications