7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவரை தூக்கில் போடுங்க.. மரண தண்டனையை உறுதி செய்த ஹைகோர்ட் கிளை
சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது மதுரை உயர்நீதிமன்ற கிளை.
2020 ஜூன் மாதம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்துள்ள ஏம்பல் கிராமத்தில் 7 வயதான சிறுமி வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென குழந்தையைக் காணாததால் பெற்றோர்கள் சிறுமியைத் தேடினர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில், கிராமத்திற்கு அருகே கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகளின் படி, சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது.

குற்றவாளி
இதையடுத்து துரிதமாக செயல்பட்ட ஏம்பல் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சாமிவேல்(26) என்கிற ராஜாவை கைது செய்து விசாரணை செய்தது. விசாரணையில், அவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், குற்றவாளி கைதுசெய்யப்பட்டு, அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தீர்ப்பு
இதையடுத்து ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து தீர்ப்பு வெளியானது. அதில், குற்றவாளியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து 3 பிரிவுகளில் மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர் சத்யா அதிரடி தீர்ப்பை வழங்கினார். அத்துடன் 6 மாதத்திற்குள் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.

தண்டனையை ரத்து செய்ய வேண்டும்
தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து சாமிவேல் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, குற்றவாளிக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை சரிதான் என்றும், அதனை உறுதிப்படுத்துமாறும், உரிய ஆவணங்களையும் ஆதாரங்களையும் எடுத்து வாதடினார்.

தூக்கு உறுதி
இதைத் தொடர்ந்து சாமிவேலுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போலீஸ் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், ஜெயச்சந்திரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதத்தையும் கேட்டு, மகிளா நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தனர் நீதிபதிகள்.
இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்திருக்கிறது.












Click it and Unblock the Notifications