சீமானுக்கு பெரிய நிம்மதி.. வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த வழக்கை ரத்து செய்தது உயர் நீதிமன்றம்
மதுரை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டிஐஜி வருண்குமார் வார்த்தை மோதல்கள் ஏற்பட்டன. இரு தரப்பும் மாறி மாறி கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதிலும் நாம் தமிழர் கட்சியினர், வருண்குமார் ஐபிஎஸ் குடும்பத்தினரையும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி ஆஜரானார். இந்த நிலையில், சீமான் மீதான அவதூறு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வருண்குமாரை விமர்சித்த சீமான்
தமிழக காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார். இவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியாக உள்ளார். இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியாக முறையே பதவி வகித்து வந்தனர்.
இந்த சூழலில், 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் கொடுத்த புகாரை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, வருண்குமார் ஐபிஎஸ்சை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்தார்.
அவதூறு வழக்கு தாக்கல்
வருண்குமார் சாதி பாகுபாடு பார்ப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் வருண்குமார் ஐபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருந்த வருண்குமார் ஐபிஎஸ், கண்டித்து இருந்தார். இதைத்தொடர்ந்து, சீமான் மீது வருண்குமார் ஐபிஎஸ் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சாட்டை துரைமுருகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து யூடியூப்பில் கருத்து கூறியிருந்தார். இது தொடர்பாக திருச்சி போலீசர் தங்களது எல்லையை மீறி வழக்குப்பதிவு செய்து சாட்டை துரைமுருகனை கைது செய்தனர்.
திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு
அப்போது அளித்த பேட்டியில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சட்டவிரோத நடவடிக்கை என கூறியிருந்தேன். எனது இந்த கருத்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாக கூறி, அப்போதைய திருச்சி மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு (தற்போது டி.ஐ.ஜி.யாக உள்ளார்) வருண்குமார், திருச்சி நீதிமன்றத்தில் என் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தான் இந்த வழக்கை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications