"கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்" என்ற சல்லித்தனமே சனாதனம்.. மதுரை எம்பிக்கு வந்ததே கோபம்!
சென்னை: சனாதனத்தை பற்றி பேசினால் நேர்மைக்கு வேலையில்லை என மதுரை எம்பி சு. வெங்கடேசன் தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: "சனாதனத்தை ஆதரித்து ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்திலும், ஆளுநர் நாடெங்கும் பேசலாம். அது நேர்மையோடு எதிர்கொள்ளப்படும். அதுவே ஜனநாயகம்.

ஆனால் சனாதனத்தை எதிர்த்துப் பேசினால் நேர்மைக்கு வேலையில்லை. "கழுத்தை வெட்டு காசு கொடுக்கிறேன்" என்ற சல்லித்தனமே அரங்கேறும். அதுதான் சனாதனம். " இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரையின் போது உதயநிதி ஸ்டாலின் எய்ம்ஸ் என எழுதிய ஒரு செங்கல்லை வைத்து பிரச்சாரம் செய்திருந்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் செங்கல்லை வைத்து எய்ம்ஸ் மருத்துவமனையை உடனே அமைக்க வேண்டும் என போராடுவதற்கு வித்திட்டது.
அந்த வகையில் தற்போது 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க 8 மாதங்களே உள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை கையில் எடுத்துள்ளார். இந்த ஆயுதத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் உதயநிதி கையில் எடுத்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடந்த இந்த மாநாட்டில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் இந்த மாநாட்டின் தலைப்பே என்னை கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும்.
அந்த வகையில் சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்து கட்ட வேண்டும். அதை போலதான் இந்த சனாதனத்தையும் எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். சனாதனம் என்பது சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் எதிரானது. இவ்வாறு உதயநிதி தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், வழக்கு பதிவு செய்வதாகவும் அறிவித்தனர். ஆனால் உதயநிதியோ எந்த வழக்கையும் தாம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், சனாதனத்திற்கு எதிராக எப்போதும் பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய உதயநிதியின் தலையை சீவ ரூ 10 கோடி தருவதாக சாமியார் ஒருவர் கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார். அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர்தான் உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications