வெள்ள நிவாரணம்.. கோபமாக பேசிய நிர்மலா சீதாராமன்.. “உபதேசம் வேண்டாம்”.. பாய்ந்து வந்த பதிலடி!
சென்னை: நிவாரணத் தொகை தொடர்பான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கருத்துக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன், திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி ஆகியோர் பதிலடி கொடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அம்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமன் காட்டம்: தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில், தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய நிர்மலா சீதாராமன், "தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார்? மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டது. இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார்." என விமர்சித்துள்ளார்.
மாநில அரசு கேட்டதும் நிதி ஒதுக்க நாங்கள் என்ன ஏடிஎம் மெஷினா என மத்திய அமைச்சர் கேட்டது குறித்து பேசிய தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாங்க என்ன அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் எனக் காட்டமாகப் பேசி இருந்தார். அதுகுறித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், உதயநிதியின் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும் என்ற அவர், சனாதன தர்மத்தின் போதும் அதை அழிக்க வரவில்லை.. ஒழிக்கவே வந்து இருக்கிறோம் என்று பேசினார் உதயநிதி என்று கூறினார்.
மதுரை எம்.பி பதிலடி: இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அவரது சமூக வலைதள பதிவில், "நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே." - நிர்மலா சீதாராமன். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை ஶ்ரீவைகுண்டத்தில் இருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டி வந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல." எனத் தெரிவித்துள்ளார்.
திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்டு "வென்று" "வென்று" தமிழ்நாடு மக்களின் பிரதிநிதியாக மக்களை எகத்தாலம் செய்யாது பேசுங்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே!! தமிழ்நாட்டில் தாங்கள் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்கிற தைரியத்தில் உங்களின் சொந்த பணத்தினை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுப்பது போல் உதாசீனமாய் பேசுவதை மாற்றிக்கொள்ளுங்கள்!
பாடி லாங்வேஜ்: ஒரு பேரிடர் நிகழ்ந்திருக்கிறது. விலைமதிப்பில்லாத மனித உயிர்களை இழந்திருக்கிறோம். இன்னமும் குடிநீரின்றி, மின் வசதியின்றி, உணவின்றி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு வளர்ந்த நாட்டிலும் இத்தகைய பேரிடரைச் சந்திப்பது மிகப்பெரிய சவாலான ஒன்று. இந்த இக்கட்டான தருணத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய உங்கள் குரலிலும், உடல் மொழியிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே என்ற கவலை கிஞ்சித்தும் காணப்படவில்லை.
"பிறிதின் நோய் தன் நோயாய்ப் போற்றும்" தமிழ்ப் பண்பாடு உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை தான்!! மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற தகவல் இல்லை. தமிழ்நாடு அரசையும், முதலமைச்சரையும் திட்டித் தீர்க்க வேண்டும் என்ற வெறியும், இன்னும் சரியாகச் சொல்வதென்றால் தவறான நேரத்தில் வெளிப்பட்ட ஆணவமும் உண்மையிலேயே வருத்தமளிக்கிறது.
வேதனை அளிக்கிறது.
நிர்மலா சீதாராமன் அவர்களே. உங்கள் இதயத்தைத் திறந்து துயருறும் தமிழ்நாட்டு மக்களைக் கொஞ்சம் பாருங்கள். மத்திய அரசு என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள். நீங்கள் பாஜகவை சேர்ந்தவர் என்கிற முறையிலும் நாங்கள் திமுகவை சேர்ந்தவர் என்கிற முறையிலும் உங்களோடு நாங்கள் அரசியல் சண்டை செய்ய, வாதாட நிறைய இருக்கிறது! நம் சண்டையை பின்னர் வைத்து கொள்ளலாம்!!

திமிர்: புயல் மழையில் சிக்கிய மக்களுக்கு மத்திய அரசிடம் நிதி கேட்டால் , இது ATM-ஆ கேட்டதும் தர என்று திமிராய் பேசும் மத்திய அமைச்சரிடம் தான், உங்க அப்பன் காசையா கேட்டோம், தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணம் தானே? மக்கள் வரியாய் கட்டிய பணத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பது போல் தமிழ்நாட்டுக்கும் கொடுங்கள் என்று கேட்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இது, தமிழ்நாட்டின் எந்தக் குடிமகனும் கொதித்துச் சொல்வான். உரிமையை கேட்டால், மொழி , வார்த்தை முக்கியம் என்று கொதித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களே ஒருமையிலும், உடல் மொழியிலும் நீங்கள் பேசிய நாகரீகம் வரலாறு மெச்சும். கடைக் கோடியில் வெள்ளத்தால் சிக்கிய மக்களுக்கு நீங்கள் தந்துள்ள பதில் வெறும் 'திமிர்'" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications