Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை நீட் தேர்வு.. இன்று விடிகாலை தற்கொலை.. புரட்சி வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை: டாக்டர் ராமதாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நீட் தேர்வு என்பது ஒருபுறம் தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் காய்க்கும் மரமாக மாறி வருகிறது.. மறுபுறம் மாணவர்களை பலி வாங்கும் பலிபீடமாக மாறியிருக்கிறது.. சிறப்புப் பயிற்சி நிறுவனங்களின் நலன் கருதி இக்கொடுமை தொடர மத்திய அரசும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.. நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்த 19 வயது ஜோதி துர்கா நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், இன்று தேர்வு அச்சம் காரணமாக விடிகாலை தற்கொலை செய்து கொண்டார்.

 Madurai Neet Student suicide issue, Dr Ramadoss statement

இதனால் பல்வேறு தரப்பினர் அதிர்ந்து போய் உள்ளனர்.. அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
'மதுரை தல்லாகுளம் காவலர் குடியிருப்பை சேர்ந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன உளைச்சலாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். மாணவியை இழந்து வாடும் தந்தை காவல்துறை சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் தற்கொலையை மற்றொரு மரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. நீட் தேர்வு நாளை நடைபெறும் நிலையில், தமது தற்கொலைக்கு நீட் குறித்த அச்சமும், மன உளைச்சலும் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டும், குரல் பதிவு செய்து விட்டும் அம்மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். உயிர்காக்கும் மருத்துவர்களை உருவாக்க கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்ட நீட் தேர்வு, இந்தியாவின் எதிர்காலத் தூண்களில் ஒருவராக வர வேண்டியவரின் உயிரைப் பறித்துள்ளது.

நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்தவர்கள் தான் மாணவி மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்.தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் போது, அது குறித்து மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து, அதற்கு தீர்வு காண முன்வர வேண்டும்.

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு பலியாகியுள்ள நிலையில், குறைந்தபட்சம் அது குறித்து ஆய்வு செய்து, மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு கூட மத்திய அரசு தயாராக இல்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மாணவர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்படும் வரை கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் இருக்க வேண்டும். அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்திலும் கல்வி மாநிலப் பட்டியலில் தான் உள்ளது. மாநிலப் பட்டியலில் இருப்பதால் அந்த நாடுகளில் கல்வியின் தரம் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை.

இன்னும் கேட்டால் கல்வி மாநிலப்பட்டியலில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் தான் உலகின் 100 முன்னணி பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியுள்ளன. கல்வியைப் பொதுப்பட்டியலில் சேர்த்தது மத்திய அரசின் அதிகாரக் குவிப்புக்கு வேண்டுமானால் பயன்படுமே தவிர, கல்வி வளர்ச்சிக்கு எந்த வகையிலும் பயன்படாது என்பது தான் உண்மையாகும்.

நீட் தேர்வைப் பொறுத்தவரை தமிழ்நாட்டையும், பிற மாநிலங்களையும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத்தேர்வுகள் இருந்த நிலையிலும் கூட, தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு இல்லை. அதே நிலை நீடிக்க அனுமதிப்பது தான் கூட்டாட்சி தத்துவத்திற்கு மதிப்பு சேர்க்கும் செயலாக இருந்திருக்கும். ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி அனுப்பிய பிறகும் கூட, அதை ஏற்றுக் கொள்ள மத்திய அரசுக்கு மனம் வரவில்லை.

மாறாக, தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை பரிசீலனைக்குக் கூட ஏற்காமல் மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. நீட் தேர்வு என்பது ஒருபுறம் தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் காய்க்கும் மரமாக மாறி வருகிறது; மறுபுறம் மாணவர்களை பலி வாங்கும் பலிபீடமாக மாறியிருக்கிறது. சிறப்புப் பயிற்சி நிறுவனங்களின் நலன் கருதி இக்கொடுமை தொடர மத்திய அரசும் அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

மக்களின் உணர்வுகளைப் புரிந்து நடப்பது தான் மக்களாட்சித் தத்துவத்தின் சிறப்பு ஆகும். அதன்படி நீட் தேர்வு குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மத்திய அரசு முற்பட வேண்டும். அதற்காக நீட் தேர்வு குறித்து தமிழகத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதனடிப்படையில் நீட் தேர்வை தொடர்வதா.... கைவிடுவதா? என்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும்.

Recommended Video

    எனக்கு பயமா இருக்கு... அம்மா, அப்பா ஐயம் சாரி... மனதை உலுக்கும் ஜோதி ஸ்ரீதுர்கா பேசிய ஆடியோ!

    நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி தான் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மற்ற அமைப்புகளும் நீட்டுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். நீட் தேர்வுக்கான எதிர்ப்பு மக்கள் இயக்கமாக மாறினால் தான் நீட் தேர்வுக்கு முடிவு கட்ட முடியும். நீட் தேர்வுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பாக தமிழ்நாட்டில் மட்டுமாவது நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+