மதுரை டூ சென்னை.. அண்ணாமலைக்கு செம கோபம்! வெட்கமா இல்லை? பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டு காவலில்?
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து, மதுரையில் இருந்து சென்னை வரை தமிழக பாஜக மகளிரணி, இன்று நீதிப்பேரணி மேற்கொள்ள போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். ஆனால், பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலில் வைத்துள்ளதற்கு, திமுக அரசை சரமாரியாக விமர்சித்திருக்கிறார் அண்ணாமலை.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.. தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "அண்ணா பல்கலைக்கழக வளாக பாலியல் வன்கொடுமை வழக்கில் அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும்! இந்த வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த சார் யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
பெண்கள் பாதுகாப்பு: அதேபோல, நாம் தமிழர் கட்சியும், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதானார். இதுபோலவே, தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை கோரி தமிழக ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார். அத்துடன் அண்ணா பல்கலை சம்பவத்துக்கு கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், தமிழ்நாட்டுப் பெண்களுக்கு அண்ணனாக, அரணாக இருப்பேன் என்றும் கடிதம் எழுதியிருந்தார்.
அந்தவகையில், தமிழக பாஜகவும், திமுக அரசுக்கு தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. கடந்த 27ம்தேதி, கோவையில் தன்னுடைய வீட்டு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 27ம் தேதி தன்னைத் தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்தினார். பச்சை வேட்டி அணிந்து, சட்டை இல்லாமல், தேங்காய் நாறால் செய்யப்பட்ட சாட்டையால், 8 முறை தன்னை தானே அடித்து கொண்டார். அத்துடன், திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை, செருப்பு அணியமாட்டேன் என்றும் சபதம் போட்டுள்ளார்.
போராட்டம்: இந்நிலையில், தன்னுடைய போராட்டத்தின் அடுத்தக்கட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி, தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிப் பேரணி போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், "அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க திமுக அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பாஜக மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
ஆளுநரிடம் மனு: ஜனவரி 3 தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பாஜக மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என பதிவிட்டிருந்தார்.
ஆனால், மகளிர் அணி பேரணிக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் சொல்லும்போது, மதுரையில் தொடங்கும் மகளிர் அணி நீதி யாத்திரை பேரணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக போலீஸ் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனாலும், திட்டமிட்டபடி நீதியாத்திரை வாகன பேரணி நடைபெறும் என்று அறிவித்தார்.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மகளிர் அணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கபபட்டுள்ளதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய பதிவில், "மகளிர் அணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை, வீட்டுக் காவலிலும் வைத்திருக்கிறது திமுக அரசு.
வெட்கமாக இல்லையா: இந்த திமுக ஆட்சியில், பாலியல் குற்றவாளிகளும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஜனநாயக ரீதியில் போராட முற்படும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளைத் தடுப்பதற்கு வெட்கமாக இல்லையா முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களே? திமுக அரசு, குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது, பொதுமக்களுக்குத் தெரிந்து விடும் என்ற பயமா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications