குடும்பத் தலைவிகளுக்கு வந்த ‘அசத்தல்’ அப்டேட்.. இந்த மாதம் முதல் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு ரூ.1000
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் குடும்பத் தலைவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதா மாதம் ரூ.1000 வழங்கப்படும் என திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி முதல் இந்த உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்த 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் மட்டுமே உரிமைத் தொகை செலுத்தப்பட்டது. மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. உரிமை தொகை பெற தகுதி இருந்தும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பலரும் விமர்சனங்களை எழுப்பினர்.
மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. மீண்டும் உரிய முறையில் விண்ணப்பித்தால் உரிமைத்தொகை அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேலும் 11.85 லட்சம் பெண்கள், மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்திருந்தனர். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தன. இதனையடுத்து, இது தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2 லட்சம் பெண்களுக்கு வரும் 10ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், அவர்களில் 2 லட்சம் குடும்பத் தலைவிகள் இந்த மாதம் முதல் உரிமைத்தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.13 கோடி பேருக்கு கடந்த மாதம் உரிமைத்தொகை வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது.
மாதந்தோறும் 15ஆம் தேதி வாக்கில், உரிமைத்தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ஆம் தேதியே, 1 கோடியே 15 லட்சம் குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications