சிவராத்திரி விழாவை கோவிலுக்குள்தான் நடத்த வேண்டும்- எதிர்ப்பால் பின்வாங்கிய இந்துசமய அறநிலையத்துறை
சென்னை: தமிழகத்தில் மகாசிவராத்திரி விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்த வேண்டும் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பாண்டில் பொதுவெளியில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்துத்துவா மாடலா?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் குறித்து பேசி வருகிறார். ஆனால் சிவராத்திரி விழாவை அரசே நடத்துவது என்பது இந்துத்துவா மாடல் எனவும் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதையடுத்தே சிவராத்திரி விழாவை கோவிலுக்குள் மட்டுமே நடத்த வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவிலுக்குள் மட்டுமே..
இதனை வரவேற்று திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் கூறியதாவது: மகா சிவராத்திரி விழாவை மக்கள் விழாவாக மாற்றி அவர்களிடையே மதப்பிரச்சாரம் செய்யும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயற்சியை விமர்சித்து நாம் கடந்த இரண்டு நாட்களாக முகநூலில் பதிவிட்டு வருகிறோம். இப்போது இந்து அறநிலையத்துறையினுடைய ஆணையர் 'குமரகுருபரன்' அனைத்து மண்டல இணை இயக்குனர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த சுற்றறிக்கையில் "மகாசிவராத்திரி கொண்டாட்டத்தை கோவிலுக்குள் மட்டுமே நடத்த வேண்டும்.

தமிழில் விழா
கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்து அவர்களுக்கான கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகளை, குறிப்பாக தமிழில் அந்தந்த கோவிலுக்குள்ளேயே நடத்த வேண்டும் என்று ஆணையிட்டு இருக்கிறார்". கோவிலுக்கு வெளியே மக்களைத் திரட்டி ஒரு மாபெரும் மதப் பிரச்சார விழாவாக அரசே நடத்த வேண்டும் என்று அமைச்சர் கூறிய கருத்திற்கு மாறாக இப்போது அறநிலையத்துறையினுடைய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.

திவிக வரவேற்பு
அறநிலையத்துறையின் இந்த அறிவிப்பை நாம் பாராட்டி வரவேற்கிறோம். கோவிலுக்குள்ளே நிகழ்த்தப்படுகின்ற நிகழ்வுகளில் பங்கேற்கின்ற கலைஞர்கள் கூட தமிழ்நாடு அரசு இசை பள்ளியில் பயின்ற கலைஞர்களாக இருக்க வேண்டும் என்றும் அதற்கு செய்யப்படுகின்ற செலவு அந்தந்த கோவில் உடைய நிர்வாக நிதி நிலைமைக்கு ஏற்ப அதற்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறநிலையத்துறை ஆணையர் வலியுறுத்தியிருக்கிறார். இதன் வழியாக கோவிலுக்கு வெளியே ஒரு பிரம்மாண்டமான மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இரவு முழுவதும் கண் விழிக்க செய்து அவர்களுடைய ஆன்மீக பிரச்சாரம்,ஆன்மீக பட்டிமன்றம் என்ற பெயரில் மத நம்பிக்கைகளை, மத உணர்வுகளை திணிக்கின்ற ஒரு முயற்சியில் ஏற்கனவே அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும் செய்து வந்த ஏற்பாடு அரசினுடைய அறநிலையத்துறையின் வேலை அல்ல என்பதை, அறநிலையத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள இந்த உத்தரவு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. ஆணையரின் இந்த அறிவிப்பை நாம் பாராட்டி வரவேற்கிறோம். இவ்வாறு விடுதலை ராசேந்திரன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications