சித்தர் சொன்னார் செஞ்சேன்.. போலீஸையே கன்பியூஸ் செய்த குருஜி மகாவிஷ்ணு
சென்னை: மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசிய விவகாரத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணையின்போது சித்தர்கள் தன்னிடம் பேசுவார்கள் என்றும், அவர்கள் தன்னை வழிநடத்தியதன்படி தான் அப்பள்ளியிலும் பேசினேன். வேறு எந்தவொரு உள்நோக்கத்தோடும் பேசவில்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதற்காக பேச்சாளர் மகாவிஷ்ணுவை அழைத்துப் பேச வைத்துள்ளனர். அப்போது அவர் "மாற்றுத் திறனாளிகள் குறைபாடுகளுக்கு முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் காரணம். மற்ற பிறவிகளில் செய்த பாவங்களால்தான் மறுபிறவி கிடைக்கிறது. போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் மாற்றுத் திறனாளிகளாகவும் ஏழைகளாகவும் பிறக்கிறார்கள்.

அதேபோல, கால், கை இழந்து, கண் பார்வையற்றவர்களாக பிறப்பதற்கு பாவங்கள்தான் காரணம்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தது பேசுபொருளாகியுள்ளது. மேலும், அந்த நிகழ்ச்சியின்போது மகாவிஷ்ணுவின் சர்ச்சைப் பேச்சை எதிர்த்த மாற்றுத் திறனாளி ஆசிரியரையும் மகாவிஷ்ணு கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதனால், மகாவிஷ்ணுவுக்கும், ஆசிரியர் சங்கருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகாவிஷ்ணுவின் சர்ச்சைக்குரிய இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன. மகாவிஷ்ணுவின் பேச்சு மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினரும் போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், மகாவிஷ்ணு சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விசாரணையில் இறங்கியது பள்ளிக் கல்வித் துறை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் இருவரும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, சென்னை திரும்பிவந்து போலீஸாருக்கு உரிய விளக்கம் அளிப்பதோடு, விசாரணைக்கும் ஒத்துழைப்பேன் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் மகாவிஷ்ணு.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே போலீஸார் கைது செய்தனர். மகா விஷ்ணு மீது ஏற்கனவே 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 20 ஆம் தேதி வரை மகா விஷ்ணு நீதிமன்றக் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் நீதி இயக்கம் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், போலீஸ் விசாரணையில் மகாவிஷ்ணு கூறியதாக பல்வேறு சுவாரஸ்ய தகவல் வேளியாகியுள்ளன. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள நிலையில், சித்தர்கள் ஆசிர்வாதத்தால் 5 லட்சம் பேர் தன்னை யூடியூப் தளத்தில் பின்தொடர்கின்றனர். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பேசியுள்ளேன்.
இதேபோல 5 நாடுகளில் சொற்பொழிவாற்றி வருகிறேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். சித்தர் சொன்னார் அதன்படி தான் அப்பள்ளியிலும் நான் பேசினேன். அவர்கள் என்னை வழிநடத்தியதன்படி தான் அப்பள்ளியிலும் பேசினேன். வேறு எந்தவொரு உள்நோக்கத்தோடும் பேசவில்லை. மாணவர்களை வழிநடத்தும் நோக்கத்தில்தான் பேசினேன். எனது பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் குறித்து இழிவுபடுத்தும் உள்நோக்கத்துடன் நான் பேசவில்லை என்று மகாவிஷ்ணு கூறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications