அக்னி மழை பெய்யும்! மனிதர்கள் பறப்பார்கள்! மகாவிஷ்ணுவுக்கு முட்டுக் கொடுக்கும் பக்தர்கள்
சென்னை: சித்தர்கள் பறப்பார்கள் என்றும் அக்னி மழை பெய்யும் என்றும் மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்கள் இன்னமும் அவருக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பது வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள். அதிலும் எம்பிஏ, சைக்காலஜி படிக்கும் பட்டதாரிகளும் மகாவிஷ்ணுவை நம்புகிறார்கள் என்பது வேதனையிலும் வேதனை!
பரம்பொருள் அறக்கட்டளையின் தலைவர் மகாவிஷ்ணு, தானே கடவுள் என கூறிக் கொண்டு பல்வேறு ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் உள்நாடு, வெளிநாடுகளிலும் அந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை சைதாப்பேட்டை, அசோக் நகரில் அரசு பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு அச்சத்தை போக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் போன ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள்தான் இந்த ஜென்மத்தில் ஏழைகளாகவும் மாற்றுத்திறனாளிகளாகவும் கருப்பாகவும் பிறக்கிறார்கள் என சிறிதும் மனசாட்சியே இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்படுமே என்றும் யோசிக்காமல் மூடநம்பிக்கை கருத்தை மாணவர்களிடம் திணிக்க முயற்சித்தார்.
அப்போது இதை அங்கிருந்த கண் பார்வையற்ற ஆசிரியர் சங்கர் தட்டி கேட்டார். அவரையும் "நீங்கள் முதன்மை கல்வி அலுவலரை விட அறிவானரா" என கேட்டு மிகவும் அசிங்கப்படுத்தி பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்த அவர் நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என பேசினார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை செப்டம்பர் 20-ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சித்தர் சொன்னதால்தான் பேசினேன். சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள், அவர்களே என்னை வழிநடத்துவார்கள்.
பள்ளியில் நான் ஏதும் தவறாக பேசவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. மாணவிகளை நல்வழிப்படுத்தும் விதமாகவே பேசினேன். பல இடங்களில் இது போல் பேசியுள்ளேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் அவர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவருடைய பேச்சை அவருடைய ஆதரவாளர்கள் எதிர்ப்பே தெரிவிக்காமல் அவரை இன்னமும் உயர்வான இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். இதுகுறித்து இளைஞர் புகழேந்தி கூறுகையில், ஒரு சில கருத்துகள் அவர் பேசியதில் சொந்த கருத்துகள். நான் என் அம்மாவை நம்புகிறேன் என்றால், அவர் எது சொன்னாலும் நான் நம்புவேன். அது போல்தான் மகாவிஷ்ணுவின் ஆதரவாளர்களும் கருதுவார்கள்.
அவர் மாற்றுத்திறனாளி குறித்து பேசியது தவறுதான். நான் அவருடைய பக்தர் இல்லை என்றார். இதுகுறித்து பெண் பக்தை கார்த்திகா கூறுகையில், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டார். ஆன்மீகம் என்றால் என்ன என தெரியாது. தீட்சை வாங்கி பயிற்சி செய்தேன்.
கணவனை இழந்த பெண்களுக்கு என்னென்ன கஷ்டம் இருக்கும் என பலருக்கு தெரியும். இந்த வாழ்க்கையே வேண்டாம் என நினைப்போம். இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து தியானம் செய்ய செய்ய உலகமே மாயை என்பதை உணர ஆரம்பிப்போம். அவருடைய வீடியோக்களை பார்க்க பார்க்க ஒரு பக்குவம் வரும். எல்லாமே மாயை, எல்லாவற்றையும் இறைவன்தான் நடத்துகிறார் என்ற புரிதல் வந்துவிடும்.
அது வந்த பிறகு இழப்புகளுக்கு ஏன் வேதனை வர வேண்டும் என நாம் நினைப்போம். இது ஒரு தைரியத்தை கொடுக்கிறது. எல்லா வீடியோக்களிலும் அன்பையும் கருணையையும்தான் போதிக்கிறார். அவர் அன்பும் கருணையும் கொண்டவர். அவர் இதுவரை தவறாக பேசி நான் எந்த வீடியோவில் பார்க்கவில்லை. நீங்கள் எடுத்துக் கொண்ட விதம்தான் தவறு.
அவர் சொல்ல வந்த கருத்தை முழுமையாக முடிக்கவில்லை. இதனால் அப்படி தவறாக எடுத்துக் கொண்டார்கள். அரசு பள்ளியில் அவர் பேசியதை பிளவை ஏற்படுத்தியதற்காக இல்லை, விழிப்புணர்வுக்காகத்தான். ஒரு மந்திரம் சொன்னால் அக்னி மழை பெய்யும். மனிதர்கள் பறப்பார்கள் . அது உண்மைதான். அறிவுப்பூர்வமாக பார்க்கக் கூடாது, ஞான பூர்வமாக பார்க்க வேண்டும் என நான் சொல்கிறேன் என அந்த பெண் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications