ரஜினி மகள் வீடு பாணி.. தங்கம் வைரம் திருட்டு.. சோ ராமசாமி சகோதரி வீட்டில் சிக்கிய வேலைக்கார பெண்கள்
சென்னை: கடந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் மகள் வீட்டில் வேலைக்கார பெண் திருடிய விவகாரம் பெரிய விஸ்வரூபம் எடுத்த நிலையில், அதே பாணியில் மறைந்த நடிகர் சோவின் சகோதரி மாயா மோகன் வீட்டில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகளை வீட்டு பணிப்பெண்கள் திருடியதாக புகார் எழுந்தது. இதையடுத்து வீட்டுப் பணிப்பெண்களான மரிய மகேஸ்வரி, நித்யா ஆகிய இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவிடம் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது வங்கி கணக்கில் பல லட்சம் பரிவர்த்தனை நடந்ததை வைத்து அவரை கண்டுபிடித்து போலீசார் அப்போது கைது செய்தனர். இந்நிலையில் அதே பாணியில் மறைந்த நடிகர் சோவின் சகோதரி மாயா மோகன் வீட்டில் வீட்டு பணிப்பெண்கள் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னை அபிராமபுரம் புனித மேரி சாலையைச் சேர்ந்த மாயா மோகன் என்பவர், மறைந்த நடிகர் சோவின் சகோதரி ஆவார். மாயா மோகன் வீட்டில் பணிப்பெண்ணாக மரிய மகேஸ்வரி என்பவர் வேலை செய்து வந்தார். மரிய மகேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக மாயா மோகனின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்திருக்கிறார்.
மாயா மோகனின் சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆகும். அண்மையில் மாயா மோகன் வெளியூர் சென்றிருந்தார். ராசிபுரத்தில் இருந்து கடந்த 16ஆம் தேதி தான் சென்னை திரும்பினார். மாயா மோகன் வீட்டில் வைத்திருந்த சிறிய மர பீரோவை திறக்க முயன்றுள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. சாவியையும் காணவில்லை. இதையடுத்து வீட்டுப் பணிப்பெண் மரிய மகேஸ்வரியிடம் கேட்ட போது, தேடிப் பார்த்து தொலைந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து மாயா மோகன் கார்பெண்டரை வரவழைத்து, மர பீரோவை திறந்து பார்த்துள்ளார். அங்கு வைக்கப்பட்டிருந்த தங்க, வைர நகைகள் காணாமல் போய் இருந்தது தெரியவந்துள்ளது. அதிர்ச்சியடைந்த மாயா மோகன், அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில் போலீசார் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். திருடு போன சம்பவம் பதிவாகும் வகையில் எந்த சிசிடிவி காட்சிகளும் இல்லாத நிலையில், வீட்டுப் பணிப்பெண் மரிய மகேஸ்வரியைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மரிய மகேஸ்வரி, நித்யா என்பவருடன் சேர்ந்து தங்க, வைர நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.
இதில் 4 தங்க மோதிரங்கள், தங்கச் செயின், வைர மோதிரம், வைர வளையல், தங்க நெக்லஸ் உள்ளிட்ட மொத்தம் 14 சவரன் நகைகள், நான்கரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.17,200 பணம் ஆகியவற்றை திருடியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து கைவரிசை காட்டிய மரிய மகேஸ்வரி, நித்யா ஆகிய இரண்டு பணிப்பெண்களையும் அபிராமபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், திருடிய நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications