வேற லெவல்.. சென்னையில் நங்கூரமிடும் உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ !
சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் விரிவாக்கப்பட உள்ளது. உலகின் முன்னணி விமான உதிரி பாக தயாரிப்பு நிறுவனமான போயிங், சென்னையில் அதன் மையத்தை பெரிய அளவில் முதலீடு செய்து விரிவுபடுத்த உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை (ஜனவரி 7) முதல் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்காக சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களின் உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, தைவான் உட்பட உலகின் பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த மாநாட்டில் பல்வேறு துறை சார்ந்த முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. உலகளாவிய நிறுவனங்கள் பலவும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளன.
அந்தவகையில், உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் (adidas) நிறுவனம், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் தன்னுடைய நிறுவனத்தை தொடங்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.
சீனாவே ஆடிப்போயிடுச்சே.. பிரபல அடிடாஸ் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவு.. அடித்து தூக்கிய அரசு
இந்நிலையில், சென்னையில் போயிங் நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் விமான உதிரி பாக தயாரிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான போயிங், சென்னைக்கு வருகிறது. சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன மையத்தை பெரியளவில் விரிவுபடுத்த போயிங் திட்டமிட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள், போயிங் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும், போயிங் நிறுவனம் சார்பில் நாளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றும் அந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள் மற்றும் தமிழக அரசு சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.
போயிங் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான போயிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னை டிஎல்எஃப் ஐடி பூங்காவில் விண்வெளி, விமானம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் தொழில்நுட்ப திறன் மையத்தைக் கொண்டுள்ளது. தற்போது, இந்த மையத்தில் 700-க்கும் மேற்பட்டோர் ஹைடெக் பொறியியல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தான், பெரிய அளவில் இந்த மையம் விஸ்தரிக்கப்பட்டு, அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க, பலநூறு கோடியை முதலீடு செய்ய போயிங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. போயிங் நிறுவனத்தின் புதிய முதலீடு 1,100 க்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications