எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம்.. மத்திய அரசிடம் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
சென்னை: சமூகத்தில் கீழ்த்தட்டிலிருக்கும் மக்களை ஒரு படியாவது ஏற்றிவிடும் இடஒதுக்கீடு சட்டத்தின் திருத்தம் கொண்டு வந்து அந்த சட்டத்திற்கு வலிமையூட்டும்படி மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது அறிக்கையில் கூறுகையில் இடஒதுக்கீடு என்கிற சமூகநீதி திட்டம் நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டதற்கான நோக்கம் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் கொடுத்து சமூக சமநிலை ஏற்பட வேண்டும் என்பதற்காகவே.

அதற்கான சட்டங்களில் இருக்கும் குழப்பங்களின் காரணமாக நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்குகளில் அந்த நோக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும்படியான தீர்ப்புகள் வழங்கப்பட்டு ஒருவித சமூகப்பதற்றம் அவ்வப்போது ஏற்படுகிறது.
நீதிமன்றங்கள் சட்டத்தின் வழி இயங்குபவை. எனவே அதன் தீர்ப்பு விமர்சனத்திற்குரியதல்ல. ஆனால் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றுமிடம்.
இந்த தீர்ப்பின் காரணமாக ஏற்படும் இடஒதுக்கீட்டுக்கான பின்னடைவை சரி செய்யும் சட்டத்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உடனே நிறைவேற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக் கொள்கிறது.
மக்களை அச்சத்தில் தள்ளும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற ஆபத்தான செயல்களில் இறங்குவதை விட்டுவிட்டு சமூகத்தில் கீழ்த்தட்டிலிருக்கும் மக்களை ஒரு படியாவது ஏற்றிவிடும் இடஒதுக்கீடு சட்டத்தின் திருத்தம் கொண்டு வந்து அந்த சட்டத்திற்கு வலிமையூட்டும்படி மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் கட்சியும் கேட்டுக் கொள்கிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications