தமிழக அரசே.. இத்துடன் நிறுத்திக் கொள்.. தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும்.. ம.நீ.ம பரபர அறிக்கை
சென்னை: இந்தியன் 2 சினிமா சூட்டிங்கில் நடைபெற்ற விபத்து தொடர்பாக, கமல்ஹாசனிடம் காவல்துறை விசாரணை நடத்தியற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, நற்பணி இயக்க அணி மாநில செயலாளர் தங்கவேலு சார்பில், மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
சென்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

3 மணி நேரம்
இதற்காக இன்று எங்கள் தலைவர் அவர்களை சாட்சி என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு வரவழைத்து மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். விபத்து நடந்த தளத்திலிருந்து 4 நொடிகளுக்கு முன்பு தான் சென்றுள்ளார். இந்த மனவேதனையுடன் பிப்ரவரி 21ஆம் தேதி எங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா எதிலும் தலைவர் பங்கேற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் இனி மேற்கொண்டு நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் உள்ள ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் காப்பீடு செய்து தரவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்திற்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

திரைப்படம்
60 வருட சினிமா துறையில் 250 படங்களுக்கு மேலாக நடித்த, எங்கள் தலைவர், சினிமா துறையை சார்ந்த அனைத்து ஊழியர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். 1980ம் ஆண்டு ரசிகர் மன்றம் வேண்டாம் என்று ஒதுங்கி, மக்களுக்கு நல்ல சேவைகளை செய்கின்ற நற்பணி இயக்கத்தை ஏற்படுத்தியவர் எங்கள் தலைவர்.
|
வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து வரும் ஊழல் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் கடந்த 2018 பிப்ரவரி 21ஆம் தேதி அன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளைப் பெற்று மக்களிடம் ஆதரவு பெற்றுள்ளோம். எங்கள் வளர்ச்சியை பிடிக்காத தமிழக அரசு காவல் துறை மூலமாக சாட்சி என்கின்ற பெயரில் மூன்று மணி நேரம் இன்று விசாரணை நடத்தி உள்ளார்கள்.

நிறுத்திக் கொள்க
தமிழக அரசே இந்த செயலை இத்துடன் நிறுத்திக் கொள்ளவும். தலைவர் மீது சிறு துரும்பு பட்டாலும் எங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்கள் அவருக்கு அரணாக நின்று பாதுகாப்போம், என்று தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு நற்பணி இயக்க அணி மாநில செயலாளர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமர்சனங்கள்
இதனிடையே, போலீஸ் விசாரணைக்கு பிறகு காலையில் நிருபர்களை சந்தித்த கமல்ஹாசன், நடந்த சம்பவங்களை விளக்கி கூறினேன் என்று கூறினாரே தவிர, காவல்துறை மீது குற்றச்சாட்டு வைக்கவில்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் சார்பில் இரவு இவ்வாறு ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. விசாரணைக்கு ஆஜராவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு கிடையாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டது கமல்ஹாசனுக்கு தெரியுமா என்றும் பல நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கு கமல்ஹாசன் என்ன மாதிரி பதில் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications