இனிமேல்தான் எனது பேச்சு அதிகரிக்கும்.. மோதிப் பாருங்கள் தெரியும்.. கமல்ஹாசன் விளாசல்
சென்னை: மோதிப் பாருங்கள் அப்போது தெரியும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று தெரிவித்தார்.
கட்சி துவங்கி ஓராண்டு ஆன நிலையில், ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள கட்சி அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம், கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார் கமல்ஹாசன். இதன்பிறகு கூட்டத்தினரிடையே அவர் உரையாற்றினார்.
அப்போது கமல்ஹாசன் பேச்சில் வழக்கத்தைவிட அதிக பஞ்ச் தெறித்தது. கமல்ஹாசன் பேசியதை பாருங்கள்.

குளத்து மீனாக இருந்த மக்கள்
தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யம் குடும்பம் பரவியுள்ளது. இப்போது தமிழகம் முழுக்க கட்சி கொடி ஏற்றப்பட்டுக் கொண்டுள்ளது. அடுத்து எங்கே ஏற்றிவைக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த இலக்கை நோக்கி பயணிப்போம். குளத்து மீனாக இருந்த மக்கள் இன்று வெளியே வந்துள்ளனர். குளத்து மீனுக்கு, வெளியே நடக்கிறது என்பது தெரியாது. ஆனால் அரசியல் உதவாக்'கரைகள்' உடைந்து மக்கள் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, குளம் வேறு நதி வேறு கிடையாது. குளற்று மீன், ஆற்று மீனாக மாறும். அதன் அடையாளம்தான் இது.

தனிமை கிடையாது
தனியாக நிற்போம் என்று சொன்னது நான் கிடையாது. நாம் என்றபோதே தனிமை நீங்கிவிட்டது என்று தான் அர்த்தம். மக்கள் பலம் இருக்கும் தைரியத்தில் தான் நான் சொல்கிறேன். எந்த கணிப்பு என்ன சொன்னாலும் மக்கள் என் கையை பிடித்து என்நாடி பார்த்து, இங்கே புத்துயிர் இருக்கிறது என்று கண்டு பிடித்து உள்ளனர். அவர்கள் வைத்தியர்கள் இல்லை, வருங்காலம் கணிக்கும் ஜோதிடர்கள்.

புரிய ஆரம்பித்துவிட்டது
எதிர்காலத்தை பற்றி கனவு கொண்டிருக்கும் பலர், நான் வரவேண்டும் என்று ஆசிர்வதித்து அனுப்பி உள்ளனர். நீங்கள் சொல்வது புரியவில்லை என்று நேற்றுவரை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். புரியக் கூடாது என்று பிரார்த்தனையில் இருந்தவர்கள் அவர்கள். இன்று அவர்களுக்கு புரிய ஆரம்பித்து உள்ளதற்கு, காரணம் நான் என்னுடைய 'ஸ்ருதியை' (குரலை) அதிகப்படுத்தி உள்ளேன்.

பேச்சு அதிகரிக்கும்
அதிகம் என்று சொல்லும்போது அதிகப் பிரசங்கம் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. நியாயமான பிரசங்கங்கள் இன்று முதல் அதிகரிக்கும். இன்னும் அவை வலிமை வரும். கணக்கு வழக்குகள் உடன் அவை வலிமை பெறும். தமிழகத்தையும், தமிழகத்தில் நிலவும் ஊழலையும் உலகம் கவனித்துக்கொண்டு உள்ளது.

மோதிப் பார்க்கட்டும்
உங்கள் அமைப்பெல்லாம் தயாராகிவிட்டதா என்று இன்னும் நம்மை பார்த்து சிலர் கேட்டுக்கொண்டுள்ளார்கள். அவர்கள் வந்து பார்க்கட்டும். அல்லது, அவர்கள் மோதிப் பார்க்கட்டும், அப்போது தெரியும். என்னை ஒரு கருவியாக மக்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.












Click it and Unblock the Notifications