கொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை.. அதிமுகவுக்கு செம ஷாக்... மாலை முரசு கருத்துக்கணிப்பு
சென்னை: அதிமுக மிகவும் வலுவாக இருப்பதாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று மாலை முரசு தனது கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன.
மாலை முரசு தொலைக்காட்சி தினசரி 26 தொகுதிகள் என்ற வீதத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிவித்து வருகிறது. இன்று கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் மேற்கு மண்டலத்திலுள்ள மாவட்டங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதிமுக வெற்றியை தடுக்கும் தோப்பு வெங்கடாசலம்
இதில் அதிமுக வலுவாக இருக்கும் பெருந்துறை தொகுதியில் திமுக 40% வாக்குகளை பெறும் என்று மாலை முரசு சர்வே தெரிவித்துள்ளது. அதிமுக 35% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். அதிமுகவில் வாய்ப்பு கிடைக்காததால் தனித்துக் களமிறங்கும் தோப்பு வெங்கடாசலம் அதிமுக வாக்குகளை பிரிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது. காங்கேயம் தொகுதியில் திமுக 43% வாக்குகளை பெறும். அதிமுக 41% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாம் தமிழர் மற்றும் அமமுக தலா 4%, மக்கள் நீதி மய்யம் 3 % வாக்குகளை பெறும்.

ஈரோட்டில் திமுக ஆதிக்கம்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் திமுக 49% வாக்குகளை பெறும். பாஜக 38% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்கும் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வெ.ரா 45% வாக்குகளை பெறுவார். அதிமுக 39% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். ஈரோடு மேற்கு தொகுதியில் இழுபறி நிலவுகிறது. ஈரோடு மேற்கு தொகுதியில் அதிமுக மற்றும் திமுக 43% வாக்குகளை பெறும். மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் தலா 5%, அமமுக 2% வாக்குகளை பெறும்.

அதிமுக முன்னிலை
திருச்செங்கோடு தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 42% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். பரமத்திவேலூர் தொகுதியில் அதிமுக 45% வாக்குகளை பெறும். திமுக 43% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும். நாமக்கல் தொகுதியில் அதிமுக 44% வாக்குகளை பெறும். திமுக 40% வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்கும்.

கொங்கு மண்டலத்தில் திமுக முன்னிலை
இன்று மொத்தம் 26 தொகுதிகளில் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது மாலை முரசு. அதில் திமுக கூட்டணி 13 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 7 தொகுதிகளிலும் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை என்ன நிலை
மாலை முரசு இதுவரை 130 தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் திமுக கூட்டணி 83 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 29 தொகுதிகளிலும் வெல்லும் . அதேபோல அமமுக கூட்டணி ஒரு தொகுதியில் வெல்லும். 17 தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக மாலை முரசு தொலைக்காட்சியில் வெளியான கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications