'தவறான ஆதார் எண்'.. தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டில் வந்த புதிய பிரச்சனை.. என்ன நடந்தது?
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பாயிண்ட் ஆப் சேல் எனப்படும் கைரேகை பதிவு செய்யும் கருவிகளில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் பிரச்சனையால் இந்த தவறுகள் நடந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்படுகிறது. இதில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு குறைவாக உள்ள முழு நேரக் கடைகள் 18,782 ஆகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் 9,388 ஆகவும் இருக்கிறது. இதேபோல ஆயிரம் முதல் ஆயிரத்து 500 குடும்ப அட்டைகள் கொண்ட முழு நேரக் கடைகள் 4,352 ஆகவும் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை, ஆயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சுமார் 2 கோடி பேருக்கு கைரேகை பெற்று வழங்கப்படுகிறது.

கைரேகை எதற்காக வாங்கப்படுகிறது என்றால், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவதில் ஏற்படும் தில்லுமுல்லுகளை தவிர்ப்பதற்காக கைரேகை வாங்கப்படுகிறது. அதற்காக ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது. ரேஷன் அட்டையின் உறுப்பினர்கள் நேரில் வந்து தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்தால் மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 'பாயிண்ட் ஆப் சேல்' என்ற கருவி மூலம் ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளர்களின் கைரேகையை பதிவு செய்கிறார்கள். இதில் ரேகை பதிவாகவில்லை என்றால் பொருட்கள் தரமாட்டார்கள். அவர்கள் ஆதார் சேவை மையத்திற்கு சென்று கைரேகையை புதுப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று முன்தினம் கைரேகை பதிவு கருவிகளில் திடீரென பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகையை பதிவு செய்யும்போது 'தவறான ஆதார் எண்', 'உங்களின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தோல்வி அடைந்து உள்ளது' என்ற தகவல் வந்துள்ளது. இதனால் ரேஷன் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்க முடியவில்லை.. இதனால் நேற்று முன்தினம் ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்க முடியாமல் வீடு திரும்பினர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று பலர் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க சென்றனர். ஆனால் பொருட்கள் வாங்க முடியாத அளவிற்கு பிரச்சனை இருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமையான நேற்றும் பாதிப்பு ஏற்பட்டது. 'பாயிண்ட் ஆப் சேல்' கருவியில் கைரேகை பதிவில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் நேற்றும் ஏராளமான மக்கள் ரேஷன் பொருட்களை கடைகளில் வாங்க முடியாமல் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி ஊழியர்கள் கூறும் போது, ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள சாப்ட்வேரில் ஏற்பட்ட பிரச்சனை தான் இதற்கு காரணம் என்றார்கள்.












Click it and Unblock the Notifications