சென்னையில் பட்டப்பகலில் டாக்டருக்கு கத்திக் குத்து.. டெலிவரி மேன் போல வீட்டிற்குள் புகுந்து கொடூரம்
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் மருத்துவரை டெலிவரி ஊழியர் என்ற பெயரில் நாடகமாடி வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் மருத்துவர் மட்டும் வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் வீட்டுக்குள் புகுந்த அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நூதன முறைகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போதைய நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது விதத்தில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றுகிறார்கள். அப்படித்தான் சென்னை வளசரவாக்கத்தில் வீட்டில் பெண் மருத்துவர் மட்டும் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு, மர்ம நபர் ஒருவர் ஆன்லைனின் ஆர்டர் வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் நுழைந்து பெண் மருத்துவரை கத்தியால் குத்தி சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற பெண் மருத்துவர். இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மகள் மற்றும் மருமகனும் இந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று மகளும், மருமகனும் வெளியில் சென்றிருக்கிறார்கள். வீட்டில் மணி மட்டும் தனியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் பெண் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட மர்ம நபர் ஒருவர் இவரது வீட்டுக்கு வந்துள்ளார். காலிங் பெல்லை அழுத்தி, ஆன்லைனில் ஆர்டர் வந்திருக்கிறது சார் என்று கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து வந்த பெண் மருத்துவர் நாங்கள் யாரும் ஆர்டர் செய்யவில்லையே என்று சொல்லியிருக்கிறார். நீங்கள் ஆர்டர் போடாவிட்டால் உங்கள் வீட்டில் உள்ள யாராவது கொடுத்திருப்பார்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் அவர் ஒரு நிமிடம் யோசித்து இருக்கிறார்.
தொடர்ந்து சரி கொடுங்கள் என்று அந்த பெண் கூறியதும், தான் கொண்டு வந்த பையில் இருந்த கத்தியை எடுத்த மர்ம நபர் பெண்ணை மிரட்டினார். வீட்டில் உள்ள தங்க நகை மற்றும் பணத்தை எடுத்து தரும்படி கூறியிருக்கிறார். ஆனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் கத்தியால் மாறி மாறி குத்தியுள்ளார். மேலும் பணம், நகை எங்கிருக்கிறது என்று சொல்லாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியிருக்கிறார்.
இதற்கிடையே வீட்டு வேலைக்காரர் ஒருவர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கத்தி கூச்சலிட்டு அங்கு வரவைத்தார். அக்கம் பக்கத்தினர் வரத் தொடங்கியதும் உயிர் பிழைத்தால் போதும் என்று அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக கத்திக்குத்தில் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பகுதியினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது, ராமாபுரம் பகுதியை சேர்ந்த நாகமுத்து (வயது 41) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகமுத்துவை கைது செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு, ஆன்லைனில் ஆர்டர் வந்திருப்பதாக கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications