மனைவி மீது கோபம்! சென்னை மெரினாவில் அதிவேகமாக ஓட்டிய நீல நிற காரின் ஓனர் வாக்குமூலம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் நீல நிற கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சென்ற விவகாரத்தில் காரில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் வேகமாக காரை ஓட்டியதாகவும் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தப்பிச் சென்றதாகவும் அபிஷேக் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னையில் நேற்று அதிகாலை மெரினா கடற்கரை சாலையில் நீல நிற கார் ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக சென்றது. இந்த கார், மெரினாவில் நடைபயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இந்த கார் சென்றுக் கொண்டிருந்தது.
அதிலும் குறிப்பாக மெரினா காமராஜர் சாலை- விவேகானந்தர் இல்லம் அருகே எதிர்புறத்தில் இருந்து கடற்கரை சாலைக்குள் சென்ற போது திடீரென பின்னோக்கியும் முன்னோக்கியும் சென்றும் காரில் சாகசம் செய்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், அந்த காரை மடக்கி பிடிக்க முயன்றார். அப்போது ரிவர்ஸில் சென்ற அந்த கார், அந்த காவலரை இடிக்கும் வகையில் முன்னோக்கி பாய்ந்தது. அப்போது சுதாரித்துக் கொண்ட காவலர் உடனடியாக ஒதுங்கியதால் அந்த கார் மின்னல் வேகத்தில் வந்து வலது புறமாக திரும்பியது. அந்த காரில் ஒரு இளைஞரும் இரு இளம்பெண்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.
அந்த காரை மீண்டும் பிடிக்க முயன்ற போதும் போக்கு காட்டி தப்பியது. தற்போது அந்த காரின் பதிவெண் கொண்டு, யாருடைய கார், காரை இயக்கியது யார் என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்தது.
அந்த காரின் பதிவெண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த கார் மயிலாப்பூரை சேர்ந்த அபிஷேக் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. காரில் மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோபத்தில் காரை வேகமாக ஓட்டியதாகவும் போலீஸார் தடுத்து நிறுத்திய போது பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தப்பிச் சென்றதாகவும் அபிஷேக் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது போன்ற தனிப்பட்ட கோபத்தில் காரை வேகமாக இயக்கிய போது யார் மீதாவது கார் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்திருந்தால் யார் பொறுப்பு என போலீஸார் கண்டித்தனர். மேலும் இது போன்ற கோப தாபங்களுக்காக பொதுமக்களுக்கு தொல்லை தருவது சரியல்ல என்றும் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications