பாலியல் தொல்லை.. சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை.. அதிர்ச்சி
சென்னை: சென்னை மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதிய கடிதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழ்நாட்டில் பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கோவையில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்து கொண்டது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து தமிழக அரசு இது தொடர்பாகப் பல நடவடிக்கைகள் எடுத்து வரும் போதிலும், அவை பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.

மாணவி தற்கொலை
இந்தச் சூழலில் சென்னை மாங்காட்டில் 11ஆம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை காரணமாக நேற்று பிற்பகல் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அந்த மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவர். நேற்றைய தினம் தந்தை வழக்கம் போல காலையில் வேலைக்குச் சென்றுள்ளார். பிற்பகல் நேரத்தில் தாயும் வெளியே சென்றுவிட, தனது அறைக்குள் சென்று அந்த மாணவி தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடிதம்
இது தொடர்பாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறையை போலீசார் ஆய்வு செய்த போது, மாணவி கடைசியாகக் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாலியல் தொல்லை
பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "இதுக்கு மேல என்னால வாழ முடியாது. ரொம்ப வலிக்கிது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. .அந்த கனவு வந்து போகுது. படிக்க முடியல. இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்ல.

School is Not Safety
என்னோட கனவு எல்லாம் போயிடுச்சு. எவ்வளவு வலி! இங்குள்ள அனைத்து பெற்றோரும் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தங்கள் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது. அம்மா போய்டு வரேன். இன்னொரு உலகத்திற்கு! பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் மட்டுமே" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், School is Not Safety என்றும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் அதிர்ச்சி
அந்த மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர்.

உதவி எண்கள்
தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications