காங்கிரஸில் இருந்து விலகலா? அல்ற சில்ற திமுக ஐடி விங்கின் கனவு பலிக்காது கண்ணா! மாணிக்கம் தாகூர்
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து மாணிக்கம் தாகூரும் பிரவீன் சக்கரவர்த்தியும் விலக முடிவு செய்துள்ளதாக திமுக நிர்வாகி ஒருவர் போட்ட ட்வீட்டிற்கு மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் ஆட்சியில் பங்கு, அதிகார பகிர்வு போன்ற விஷயங்களை கிளறி வருகிறார்கள்.

இதனால் கூட்டணியில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. தவெகவின் விஜய் அதிகாரப் பகிர்வு என்பதை கூறியிருந்ததால் காங்கிரஸ் கட்சியினர் தவெகவுடன் கூட்டணி அமைப்பார்கள் என சொல்லப்பட்டது.
அதாவது திமுகவிடம் அதிக சீட் கேட்பது, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்துவது என்றும் அதற்கு திமுக உடன்படாத பட்சத்தில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்றும் சொல்லப்பட்டது.
அதற்கேற்ப ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, அண்மையில் விஜய்யை சந்தித்து பேசினார். அது போல் காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் தொடர்ந்து அதிகாரப் பகிர்வு குறித்து பேசி வந்தார். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பங்கு கொடுத்து முன்னுதாரணமாக இருப்பதை சுட்டிக் காட்டினார். இது திமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மாணிக்கம் தாகூருக்கு எதிராக திமுக ஐடி விங் நிர்வாகிகள் ட்வீட் போட்டு வந்தனர்.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. பின்னர் ஜனநாயகனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் கருத்து பதிவிட்டு வந்தனர்.
மேலும் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுடன் செல்லவும் இவர்கள் விரும்பியதாக தகவல்கள் வெளியாகின. இது திமுக தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆயத்த கூட்டம் அதன் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, விஜய் வசந்த், ராகுலின் நெருங்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனியே கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. அதில் பெரும்பாலானோர் திமுக கூட்டணிக்கே செல்ல வேண்டும் என தெரிவித்திருந்தனர். வெகு சிலரே தவெக கூட்டணி குறித்து பேசியிருந்தனராம்.
ஆனால் அவர்களின் பேச்சை காங்கிரஸ் கட்சி கேட்கவில்லை என சொல்லப்படுகிறது. இதையடுத்து கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் தலைமையே முடிவு எடுக்கும். அதுவரை கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசவும், சமூகவலைதளங்களில் பதிவிடவும் கூடாது என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.
இது தவெக கூட்டணி குறித்து பேசியவர்கள், ஆட்சியில் பங்கு கேட்டவர்கள் உள்ளிட்டோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுகவினரும் அவர்களை டிரோல் செய்தனர். அந்த வகையில் திமுக நிர்வாகி ஒருவர், "திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றிக் கொண்டு போக போட்ட திட்டம் தோல்வியில் முடிந்ததால் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர்
மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்" என பதிவிட்டுள்ளார்.
இதற்கு மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் தனது பதிவில், "#அல்றசில்றITwing கனவு பலிக்காது கண்ணா .
🤣 நான் உண்மையான காங்கிரஸ்காரன்" என தெரிவித்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications