ஜூலை 26ல் மெழுகுவர்த்தி பேரணி! 234 தொகுதிகளிலும் களமிறங்கும் காங்கிரஸ்! பரபரக்கும் அரசியல் களம்!
சென்னை: மணிப்பூர் அரசை கலைக்க வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் ஜூலை 26ஆம் தேதி 234 தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி பேரணி நடத்தவுள்ளது தமிழக காங்கிரஸ்.
இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள கே.எஸ்.அழகிரி, மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது என கடுமை காட்டியுள்ளார். மணிப்பூர் கொடுரத்தை கண்டித்து மகிளா காங்கிரஸ், திமுக மகளிரணி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் காங்கிரஸ் மெழுகுவர்த்தி ஊர்வலத்தை நடத்துகிறது.

இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதனிடையே இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''மணிப்பூரில் மெய்தி மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் அம்மாநிலம் கலவர பூமியாகியுள்ளது. வன்முறை கலவரங்களால் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. இதுவரை 120 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் தாக்கப்பட்டு, அவற்றில் சில தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து 300 முகாம்களில் 60 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநில பழங்குடியின சகோதரிகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை எதிர்த்து நாடு முழுவதும் தன்னிச்சையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த நிகழ்வுக்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவுக்கும் காரணமான பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்து குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கத் தவறிய மணிப்பூர் மாநில அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் கூறவும் வருகிற ஜூலை 26 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரைக் கேட்டுக்கொள்கிறேன்.
துரியோதனன் சபையில் திரௌபதியை துச்சாதனன் துகிலுரித்து மானபங்கம் செய்தபோது நெட்டை மரங்களாக நின்று புலம்பியதை போல பிரதமர் மோடி புலம்பியிருக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். அன்றைக்குப் பாரதப் போரில் கௌரவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ அதே கதிதான் பாஜகவுக்கும் விரைவில் ஏற்படப் போகிறது. மணிப்பூர் சகோதரிகளின் மானபங்கத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்காமல் தப்ப முடியாது.
மணிப்பூரில் நடந்த அவமானத்திற்குப் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகிற பிரதமர் மோடிக்கு உரிய பாடத்தைப் புகட்டுவதற்கு ஜூலை 26 ஆம் தேதி நடைபெறுகிற மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று வெற்றிகரமாக நடத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications