வைத்தீஸ்வரன் கோயிலில் ஆளுநர் இல.கணேசனிடம் கேட்கப்பட்ட அந்த கேள்வி.. புகைச்சலில் பாஜக சீனியர்ஸ்!
சென்னை: வைத்தீஸ்வரன் கோயிலில் ஆளுநர் இல.கணேசனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் கூறிய பதிலை கேட்டு பாஜக மூத்த நிர்வாகிகள் புகைச்சலில் உள்ளதாக தெரிகிறது.
பாஜகவின் மூத்த தலைவரான இல கணேசன் ராஜ்யசபா எம்பியாக இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ச் 22 ஆம் தேதி மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இவர் அந்த மாநிலத்தின் 17 ஆவது ஆளுநர் ஆவார்.
இதைத் தொடர்ந்து மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் சிங் தன்கர், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போது அந்த மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பை இல கணேசன் கடந்த ஜூலை மாதம் முதல் கூடுதலாக நிர்வகித்து வருகிறார்.
இல.கணேசன் இல்ல விழா.. அழைப்பு விடுத்தும் அண்ணாமலையும் ஆளுநரும் வராதது ஏன்? பரபரக்கும் கேள்விகள்
இல.கணேசனின் சகோதரர்
இவருடைய மூத்த சகோதரன் இல கோபாலனின் சதாபிஷேக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, முதல்வர் ஸ்டாலின், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை மாவட்டம்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அவருடன் அவருடைய அண்ணன் கோபாலன் குடும்பத்தினரும் வருகை தந்திருந்தனர். மணிப்பூர் ஆளுநரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் வரவேற்றனர்.
பூரண கும்ப மரியாதை
ஆளுநர் இல கணேசனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை ஆளுநர் இல.கணேசன் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகளால் எழுப்பப்படுகிறதே, அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டது.
திரும்ப பெற கேட்கவில்லை
அதற்கு இல கணேசன், என்னை யாரும் திரும்ப பெற வேண்டுமென கூறவில்லை. தமிழக அரசியல் பற்றி இனி தான் படிக்க வேண்டும் என கூறியிருந்தார். இது அவரை சுற்றியிருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. திமுகவை விமர்சிக்காமல் இல.கணேசன் அளித்த பதில் பாஜக மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அது போல் அவருடைய சகோதரனின் சதாபிஷேக விழாவுக்கு வந்திருந்த முதல்வர் ஸ்டாலினை வாசல் வரை வந்து வரவேற்றதும், தமிழக ஆளுநரை திரும்ப பெற கடிதம் எழுதிய திமுக எம்பி டி.ஆர்.பாலுவை கட்டித் தழுவி அழைத்து சென்றதும் பாஜகவில் பெரும் புகைச்சலை கிளப்பியுள்ளது. தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் திமுக கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தின. இந்த விஷயத்திற்கு புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டிருந்தார்.
விவாத நிகழ்ச்சி
அண்மையில் ஒரு தொலைகாட்சி சேனலின் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழிசை, ஆளுநர்களை திரும்ப பெற வேண்டும் என்ற கருத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதை மேற்கோள்காட்டிதான் ஆளுநர்கள் மற்ற மாநில விவகாரங்களில் தலையிடக் கூடாது என முரசொலி காட்டாமாக நேற்றைய தினம் தலையங்கம் தீட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.