திமுக கூட்டணி.. மமக சார்பில் பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா...மணப்பாறையில் அப்துல் சமது போட்டி
சென்னை: திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகிறார். மணப்பாறையில் அப்துல் சமது வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6 அன்று நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள எம். ஹெச். ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவதெனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம், திருச்சி மாவட்டம் மணப்பாறை தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொகுதி ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவும் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாபநாசம் தொகுதியில் போட்டியிடுகிறார். மணப்பாறையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அப்துல் சமது வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக தற்போதைய எம்எல்ஏ இரா.சந்திரசேகர் போட்டியிடுகிறார்., பாபநாசம் தொகுதியில் பாபநாசம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கோபிநாதனும் போட்டியிடுகின்றார். எனவே, இரு தொகுதிகளிலும் அதிமுக - மமக இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications